ராஜதந்திரம்... மாஸ்கோவில் நிகழுமா மாயாஜாலம்.. இந்தியா சீனாவுக்கு கிடைத்த முதல் சூப்பர் வாய்ப்பு
டெல்லி: கிழக்கு லடாக்கில் இந்தியாவும் சீனாவும் மோதிவரும் நிலையில், அடுத்த மாதம் செப்டம்பர் 9-11 தேதிகளில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ரஷ்யா செல்லக்கூடும் என கூறப்படுகிறது. ஏனெனில் ஜெய்சங்கரை ரஷ்யா அனுப்புவதற்கு இந்தியா ஆலோசித்து வருகிறது, அங்கு சென்றால் அவர் சீன வெளியுறவு மந்திரி வாங்கை சந்திக்க வாய்ப்பு உள்ளது. இரு நாட்டு தலைவர்களும் நேரில் முதல்முறையாக சந்தித்து பேசினால் எல்லை பிரச்சனைக்கு தீர்வு காண வாய்ப்பு உள்ளது.
Recommended Video
இந்தியா சீனா இடையே கிழக்கு லடாக்கில் கடந்த 4 மாதங்களாக பதற்றம் நீடித்து வருகிறது. ஜூன் 15 ஏற்பட்ட கால்வான் பள்ளத்தாக்கில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். சீன தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டது. ஆனால் வெளியிடப்படவில்லை.
இந்த சம்பவம் நடந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு ஜூன் 17 அன்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், சீன வெளியுறவு அமைச்சர் வாங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அதன்பின்னர் ஜூன் 23 அன்று காணொலி காட்சி வாயிலாக ஆர்.ஐ.சி வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தில் ஜெய்சங்கர் மற்றும் வாங் சந்தித்து பேசினார்கள். ஆனால் இப்போது தான் முதல்முறையாக இருவரும் நேரில் சந்திக்க போகிறார்கள்.
ஜிஎஸ்டி இழப்பீடு.. ரிசர்வ் வங்கியிடம் கடன் வாங்கலாம்.. மாநிலங்களுக்கு மத்திய அரசு 2 ஆப்சன்!
ஜெய்சங்கருக்கு அழைப்பு
அடுத்த மாதம் (செப் 9 முதல் 11) மாஸ்கோவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்க இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு "அழைப்பு வந்துள்ளது" என்று வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தார். ஆனால் அவர் பங்கேற்பது குறித்து அரசு முடிவை எடுத்தவுடன், நாங்கள் உங்களுக்கு அறிவிப்போம் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஆன்லைனில் கூட்டம்
இந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்திற்கு முன்னதாக, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தலைமையில் செப்டம்பர் 4 ஆம் தேதி காணொளி காட்சி மூலம் பிரிக்ஸ் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டம் நடக்கிறது, இந்த கூட்டத்தில் ஜெய்சங்கர் மற்றும் வாங் ஆகியோரும் கலந்து கொள்வார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
ரஷ்யாவுக்கான இந்திய தூதர்
சீனா மற்றும் இந்தியா இடையிலான பரபரப்பான ராஜதந்திர நடவடிக்கைகள் ரஷ்யாவில் மீண்டும் வேகம் அடைந்திருப்பதாக ரஷ்யாவுக்கான இந்திய தூதர் டி பி வெங்கடேஷ் வர்மா தெரிவித்தார். ரஷ்ய அதிகாரிகளுடன் இதுபற்றி தொடர்ந்து பேசி வருகிறார். முன்னதாக இந்த வார தொடக்கத்தில், இந்திய தூதர், ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் துணை அமைச்சர் இகோர் மோர்குலோவுடன் இதுபற்றி உரையாடினார். இரு நாட்டு உறவுகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது.
ராஜதந்திரம்
இதனிடையே இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர், ரஷ்யாவில் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் உடன் ஜெய்சங்கர் சந்திக்கப்போவது குறித்து கூறும் போது,
எல்.ஐ.சி நிலைப்பாடு விவகாரத்தில் அனைத்து பிரச்சனையும் ராஜதந்திரத்தின் மூலம் தீர்க்கப்பட்டன என்ற ஜெய்சங்கரின் கருத்தை நினைவு கூர்ந்தார். இதன்படி சீன அமைச்சருடன் நேரில் பேசி தீர்வு கண்டால் எல்லை பிரச்சனை சுமூகமாக முடியும் என்று நம்பப்படுகிறது.