இந்திய எல்லையில் சீனா அட்டகாசம்.. அதி நவீன ஆயுதங்களுடன், 40 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிப்பு.. ஷாக்
டெல்லி: பேச்சுவார்த்தைகளுக்கு பிறகும்கூட, இந்திய எல்லையிலிருந்து சீன ராணுவம் பின்வாங்கவில்லை. இன்னமும் சுமார் 40,000 சீன ராணுவ வீரர்கள் நவீன ஆயுதங்களுடன் எல்லையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
லடாக் பிராந்தியத்தின் கிழக்குப்பகுதியில் உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே, சீன ராணுவம் ஆக்கிரமிப்பு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இவ்வாறு ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் செய்ய இறங்கிய போது, அதை தடுத்த இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.
Recommended Video
இந்த மோதலுக்கு பிறகு இப்பிரச்சினை சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த நிலையில்தான், இரு நாட்டு, ராணுவ கமாண்டர்கள் அளவில் இதுவரை நான்கு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன.
இந்தியாவிடம் அத்துமீறல்.. சீன செயல்பாடு ஏற்றுக்கொள்ள முடியாதது..அமெரிக்க வெளியுறவு செயலாளர் அதிரடி
பேச்சுவார்த்தை
கடந்த 14ஆம் தேதி நான்காவது கட்ட பேச்சுவார்த்தை நடந்த பிறகு, அடுத்தகட்ட முன்னெடுப்புகள் எதுவும் இரு நாடுகளில் இருந்தும் இன்னும் எடுக்கப்படவில்லை. பேச்சுவார்த்தையில் வெற்றி கிடைத்ததால் ஒரு சில பகுதிகளில் இருந்து சீன ராணுவம் பின் வாங்கியதாக தகவல்கள் தெரிவித்தன. குறிப்பாக கல்வான் பகுதி, ஹார்ட் ஸ்பிரிங்ஸ் பகுதி, பேங்காக் ஏரியை ஒட்டிய ஃபிங்கர்ஸ் பிராந்தியத்தின் ஒருசில பகுதிகளில், சீன ராணுவம் படைகளை விலக்கிக் கொண்டதாக தகவல் வெளியானது.
சீனா தொல்லை
அதேநேரம் டெப்சாங் சமவெளிப் பகுதியில் இந்திய ராணுவத்தை ரோந்து செல்ல விடாமல் சீனா தடுத்து தொல்லை கொடுத்து வருகிறது. ஃபிங்கர் 5 பகுதியிலிருந்து கிழக்கு நோக்கி சீன ராணுவம் பின்வாங்கவில்லை. இந்த பகுதியில் ராணுவ நிலை அமைப்பதற்கு சீனா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவேதான் பின் வாங்க மறுப்பு தெரிவித்து வருகிறதாம்.
40,000 சீன ராணுவ வீரர்கள்
செய்தி நிறுவனமான ஏஎன்ஐ ராணுவ வட்டார தகவல்களை மேற்கோள்காட்டி ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது: சீன ராணுவம் எல்லையில் இருந்து பின் வாங்குவதற்கு தயாராக இல்லை. எல்லைப் பகுதிகளில் சுமார் 40,000 சீன ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் வான்வெளி தாக்குதல் தடுப்பு கருவிகள், நீண்ட தூர இலக்குகளை குறிவைத்து தாக்கக்கூடிய பீரங்கிகள் போன்ற அதிநவீன ஆயுதங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
பின்வாங்காத சீனா
கிழக்கு வடக்கு பகுதியில் சீன ராணுவம் முழுமையாக பின்வாங்கவில்லை. இந்தியாவுக்கு அவர்கள் கொடுத்த வாக்குறுதியை மதிக்கவில்லை. ராணுவ உயர்மட்ட அளவிலான அழுத்தம் இந்த விஷயத்தில் தேவைப்படுகிறது. தேசிய பாதுகாப்பு செயலாளர் அஜித் தோவல் சில வாரங்களுக்கு முன்பாக சீனாவுடன் நடத்தியது போன்ற பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட தேவையுள்ளது. அல்லது சீன ராணுவம் பின்வாங்குவதற்கு எந்த அறிகுறியும் இல்லை என்று ராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாக, அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.