இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகள் 5 மணி நேரம் பேச்சு.. எல்லை பிரச்சினை முடிவுக்கு வருமா?
டெல்லி: எல்லைப் பிரச்சனை தொடர்பாக இந்தியா மற்றும் சீனா நாட்டு ராணுவ கமாண்டர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை இன்று 5 மணி நேரங்கள் நடைபெற்றது.
Recommended Video
இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இடையே சுமார் நான்காயிரம் கிலோமீட்டர் தூரம் எல்லை பரப்பு உள்ளது. இந்த நிலையில் சமீப காலங்களாக இந்த எல்லைப் பகுதியில் இரு நாட்டு ராணுவ வீரர்கள் மத்தியில் மோதல் அதிகரித்து வருகிறது.
இந்தியா வழக்கமாக செய்யக்கூடிய ரோந்து பணிகளுக்கு கூட, சீன ராணுவம் முட்டுக்கட்டை போடுவதாக இந்திய தரப்பு குற்றம் சாட்டுகிறது. மே மாதம் 5ம் தேதி மற்றும் 6ம் தேதி இந்தியா மற்றும் சீன ராணுவ வீரர்கள் இடையே, கைகலப்பு ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இந்த நிலையில் லடாக் எல்லையை ஒட்டிய சுமார் 38 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவை சீன ராணுவம் ஆக்கிரமித்து கொண்டுள்ளதாக இந்தியத் தரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தது. சுமார் 5000 ராணுவ வீரர்களை சீனா எல்லையில், நிலைநிறுத்தியது. சில செயற்கைக்கோள் புகைப்படங்கள் சீன தரப்பு பீரங்கி உள்ளிட்ட ஆயுதங்களை குவித்து வைத்திருப்பது தகவலை அம்பலப்படுத்தியது.
ராணுவ ஒத்துழைப்பு மட்டுமின்றி இரு நாடுகளும் தங்களது விமான படைகளையும் அங்கு களமிறங்கின. இந்திய விமானப்படையின் போர் விமானங்கள் லடாக் பகுதியில் ரோந்து வந்த நிலையில் சீன நாட்டு ராணுவ ஹெலிகாப்டர்களும் அங்கு பாய்ந்தன. இது பதட்டத்தை மேலும் அதிகரித்தது.
இந்த நிலையில்தான் இந்தியா மற்றும் சீன நாட்டு எல்லைப் பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கு அமெரிக்கா உதவி செய்யும் என்று அந்த நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் மே 27ம் தேதி ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இதையடுத்து மே 28-ஆம் தேதி அவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசியதாகவும் சீன பிரச்சனை தொடர்பாக அவர் நல்ல மனநிலையில் இல்லை என்றும் ஒரு தகவலைத் தெரிவித்திருந்தார். ஆனால் அமெரிக்காவின் மத்தியஸ்தம் தேவையில்லை என்று இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுமே திட்டவட்டமாக தெரிவித்துவிட்டன.
இந்த நிலையில்தான் இருநாட்டு தரப்பிலும் பிராந்திய அளவிலான இராணுவத் தலைவர்கள் மட்டத்தில் சுமார் 12 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்த நிலையில்தான் ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்கு இந்திய தரப்பு கோரிக்கை விடுத்திருந்தது.
இதனை சீனா ஏற்றுக் கொண்டது. இதை அடுத்து சீன நாட்டு எல்லைக்குள் உள்ள மால்டோ என்ற பகுதியில் அதாவது எல்லை கட்டுப்பாட்டு கோட்டிலிருந்து சுமார் 20 கிலோ மீட்டருக்கு அந்தப் பக்கம் உள்ள பகுதியில் இன்று காலை 11.30 மணிக்கு பேச்சுவார்த்தை கூட்டம் துவங்கியது. 5 மணிநேரங்கள் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
ஆஸ்திரேலியாவுக்கு பயணிப்பதை தவிர்க்கவும்.. மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா!
இந்திய தரப்பு பேச்சு வார்த்தைக் அளவிற்கு லெப்டினன் ஜெனரல் ஹரிந்தர் சிங் தலைமை வகித்தார். சீன தரப்புக்கு திபத் மிலிட்டரி மாவட்டத்தின் கமாண்டர் தலைமை வகித்தார். 5 மணி நேரம் நீடித்த இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்திய ராணுவ தரப்பில் வெளியிட்ட அறிக்கையில், இந்தியா மற்றும் சீன நாட்டு அதிகாரிகள் ராணுவம் மற்றும் ராஜாங்க ரீதியிலான வழிமுறைகளின்படி தொடர்ந்து தொடர்பில் இருப்பார்கள். தற்போது உள்ள எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காண முற்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த பேச்சுவார்த்தையின்போது, ஏப்ரல் மாதம் எல்லையில் என்ன நிலை இருந்ததோ, அதே நிலை இருக்க வேண்டும் என சீன தரப்பிடம் இந்தியா கோரிக்கைவிடுத்தது என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, பேச்சுவார்த்தை முடிவடைந்து மாலை 5.30 மணியளவில், இந்த பேச்சுவார்த்தைக் குழு, இந்திய எல்லைப் பகுதிக்குள் திரும்பியது குறிப்பிடத்தக்கது.