ஹெலிகாப்டரில் கூட தூக்கிட்டு போகலாம்.. அதி நவீன பீரங்கி.. எல்லையில் குவிக்கும் சீனா.. முன்பே பிளான்
டெல்லி: கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் மாதம் இந்திய ராணுவ வீரர்கள் மீது சீன ராணுவ வீரர்கள் அத்துமீறி கைகலப்பு மோதலில் ஈடுபட்டது, முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்று என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இந்திய உளவு அமைப்புகள் மற்றும் அமெரிக்க உளவு அமைப்புகளின் தனித்தனி அறிக்கைகள் இந்த தகவலை உறுதி செய்கின்றன.
பிஃங்கர் 4, கல்வான், மற்றும் ஹாட் ஸ்ப்ரிங் பகுதிவரை சீனா ஊருடுவ ஏற்கனவே மிகுந்த திட்டமிட்டு காய் நகர்த்தி உள்ளது என்பதை இரு நாடுகளின் உளவு அமைப்புகளும் கண்டறிந்துள்ளன.
கல்வான் மோதலில் கொல்லப்பட்ட சீன ராணுவ வீரர்களுக்கு நேர்ந்த கதி என்ன? அமெரிக்க ஊடகங்கள் திடுக் தகவல்
டி-15 பீரங்கிகள்
இதில், சில பகுதிகளில் நவீன ஆயுதங்களை சீன நாட்டு ராணுவம் முன்கூட்டியே கொண்டு நிலை நிறுத்தி வைத்துள்ளதும் தற்போது அம்பலமாகியுள்ளது. இதேபோல, திபெத் எல்லை பகுதியில் டி-15 வகை பீரங்கிகளை சீன ராணுவம் நிறுத்தி வைத்துள்ளதாக கடந்த வருடம் சில ஊடகங்களில் செய்தி வெளியானது. இது எதற்காக என்பது அப்போது புரியாமல் இருந்துள்ளது. ஆனால், லடாக் எல்லைப் பகுதியில் சீன ராணுவம் ஊடுருவ முற்பட்டபோது சீன முன்னேற்பாடு நடவடிக்கைகள் எதற்கு என்பது தெரியவந்துள்ளது.
மலைப்பாங்கான பகுதிகள்
டி-15 வகை பீரங்கி 30 டன் எடை கொண்டது. 105 எம்எம் துப்பாக்கி அதனுடன் இணைந்திருக்கும். எனவே மலைப்பாங்கான பகுதிகளில் இந்த வகை பீரங்கிகளை கொண்டு துல்லியமாக தாக்குதல் நடத்த முடியும். அதுமட்டுமல்ல, ஹெலிகாப்டர்கள் மூலமாக இந்த வகை பீரங்கிகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வது எளிது.
இந்திய ராணுவம்
இதனிடையே இந்திய ராணுவம் டி-90 வகை பீரங்கிகளை எல்லையில் அணிவகுக்க ஆரம்பித்துள்ளது. இது சீனா நிறுத்தி வைத்துள்ள பீரங்கிகளை விட நவீனமானது. அதேநேரம் சீன ராணுவ நிறுத்தி வைத்துள்ள பீரங்கிகளை விட இந்திய பீரங்கிகளின் எடை அதிகமாகும். இந்திய பீரங்கிகளின் எடை 45 டன் என்று கூறப்படுகிறது.
பீரங்கிகள்
சீனா நவீனமான ஆயுதங்களை குவித்து வைத்து தயார் நிலையில் இருப்பதை உணர்ந்து இந்திய ராணுவம் தனது வீரர்களுக்கு எந்த சூழ்நிலையும் எதிர் கொள்வதற்கு தயாராக இருக்கும்படி உத்தரவிட்டுள்ளது. டி-72 டி-90 மற்றும் அர்ஜுன் வகை பீரங்கிகள் இந்திய ராணுவத்திடம் ஏற்கனவே உள்ளன. இருப்பினும் மலைப்பாங்கான பகுதிகளில் விடவும் தரப்பான பகுதிகளில்தான் இவை மிகவும் சிறப்பாக செயல்படக் கூடியவை.
இந்திய ஹெலிகாப்டர்கள்
சீனாவோ மலைப்பகுதிகளில் துல்லியமாக தாக்கக் கூடிய வகையிலான பீரங்கிகளைக் கொண்டு குவித்து வருகிறது. இதை வைத்து பார்க்கும்போது சீனாவின் உள்நோக்கம் என்ன என்பதை எளிதாகப் புரிந்து கொள்ள முடிவதாக கூறுகிறது ராணுவ வட்டாரத் தகவல். ஹெவி-லிப்ட் வகை சினூக் ஹெலிகாப்டர்களை இந்தியா எல்லையில் தயார் நிலையில் வைத்துள்ளது. சீனாவின் டி -15 பீரங்கி தாக்குதலை முறியடிக்க நமது ஹெலிகாப்டர்கள் உதவிகரமாக இருக்கும் என்பதே இதற்கு காரணம்.
நமது துப்பாக்கி
அருணாச்சல பிரதேசத்தில் இருந்து லடாக் வரையிலான சீன எல்லைப் பகுதியில் நமது ராணுவத்தினரிடம் எம் -777 வதை துப்பாக்கிகள் (பீரங்கி போன்றவை) வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆயுதங்கள் அமெரிக்காவிலிருந்து தயாரிக்கப்பட்டு சமீபத்தில் நமது ராணுவத்தில் சேர்க்கப்பட்டன. ராணுவத்தின் 7 வெவ்வேறு படைப்பிரிவுகளில் மொத்தம் 145, எம் -777 வகை துப்பாக்கிகள் உள்ளன. அதாவது கிட்டத்தட்ட ஒரு படைப்பிரிவில் 18 துப்பாக்கிகள் உள்ளன. எம் -777 துப்பாக்கிகளைப் பற்றிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், அதை ஹெலிகாப்டர் மூலம் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகர்த்த முடியும்.