மவுண்ட் கைலாஷ் புனித தலம் அருகே ராணுவ தளவாடங்களை குவிக்கும் சீனா! அம்பலப்படுத்திய சாட்டிலைட் படங்கள்
டெல்லி: மவுண்ட் கைலாஷ் பகுதியில் சீனா ராணுவ தளவாடங்களை குவித்து வருகிறது. ஏப்ரல் மாதம் துவங்கிய இந்த வேலைகள் இப்போது முடிந்துள்ளதாக தெரிகிறது. இதற்கு ஆதாரமாக செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
Recommended Video
கைலாஷ், மானசரோவர் பகுதி சிவபெருமானை வழிபடும் இந்துக்களுக்கு இது ஒரு புனிதத்தலம். ஆண்டுதோறும் தரிசனத்துக்காக ஏராளமான பக்தர்கள் இங்கு செல்வது வழக்கம்.
1950களின் இறுதிவரை, மவுண்ட் கைலாஷ் பகுதியில் உள்ள கிராமங்களில் இந்தியா வரி வசூல் செய்து வந்தது. ஆனால் திபெத் பிரச்சனையின்போது மவுண்ட் கைலாஷ், மானசரோவர் மற்றும் கிழக்கு லடாக் பகுதிகளை சீனா அபகரித்துக் கொண்டது.
வந்தே பாரத் ரயில்... சீனாவுக்கு பலத்த அடி... டெண்டர் ரத்து செய்தது... மத்திய ரயில்வே!!
கைலாஷ் மானசரோவர்
இந்தியாவிலிருந்து பக்தர்கள், மவுண்ட் கைலாஷ், மானசரோவர் பகுதிகளுக்குசென்று வருவதற்கு, சீனா அடிக்கடி இடையூறு விளைவித்து வருவது வாடிக்கையாகிவிட்டது. நாதுலா மற்றும் டெம்கோக் பகுதியிலிருந்து கைலாஷ், மானசரோவர் செல்லும் பாதை சற்று எளிமையாக இருக்கும். ஆனால் இந்தப் பாதையை சீனா தடுத்து, கடினமான வழியாக அறியப்படும் உத்தரகாண்ட் மாநிலம் பிதொராகார் வழியாக பக்தர்களை அனுமதிக்கிறது.
மூன்று நாடுகள் சந்திப்பு
இந்த நிலையில்தான், லிபுலே என்ற இந்தியா-சீனா-நேபாளம் நாடுகள் எல்லை சந்திக்கக்கூடிய சந்திப்பு பகுதி வழியாக 80 கிலோ மீட்டர் நீளத்துக்கு சாலை அமைக்கிறது இந்தியா. இதன் மூலமாக, கைலாஷ் மானசரோவருக்கு பக்தர்கள் எளிதாக சென்று வரலாம். இந்த சாலை திட்டத்திற்கு நேபாளம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
ஏப்ரலில் துவங்கிய வேலை
இந்த நிலையில் மவுண்ட் கைலாஷ் அருகே ராணுவ தளவாடங்களை சீனா குவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் துவங்கி இப்போது வரை இந்த பணிகள் படிப்படியாக நடைபெற்று உள்ளன என்பது செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் அம்பலமாகியுள்ளது.
ஏவுகணைகள்
ஆகஸ்ட் 16ஆம் தேதி எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்களில் இந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக ஆங்கில இணையதளம் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது. நிலப்பரப்பிலிருந்து வானுக்கு ஏவி எதிராளியின் இலக்கை தாக்கக்கூடிய ஏவுகணைகள் இங்கு வைக்கப்பட்டுள்ளதாக அந்த புகைப்படங்களில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.
ரேடார்கள்
வாகனங்களில் நிலை நிறுத்த கூடிய ரேடார்கள் இங்கு நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இந்திய எல்லையிலிருந்து சுமார் 90 கி.மீ தூரத்தில், இந்த உபகரணங்கள் குவிக்கப்பட்டுள்ளன. லடாக் எல்லையில், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், சீனா ராணுவ அத்துமீறலை தடுத்தபோது, இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணமடைந்தனர். இந்த நிலையில், லடாக் எல்லையை போலவே, கைலாஷ் மானசரோவர் புண்ணியஸ்தலம் பகுதியிலும், சீனா ராணுவ குவிப்பில் ஈடுபடுவதை இந்த படங்கள் உறுதி செய்கின்றன.