திரும்பி போங்க.. ரோடு போடாதீங்க.. இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது?
டெல்லி: ராணுவ மட்டத்திலான இன்றைய பேச்சுவார்த்தையின்போது, சீனாவிடம் இந்திய தரப்பு வலியுறுத்தியது என்ன, பதிலுக்கு சீன தரப்பு கூறியது என்ன, என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
Recommended Video
இந்தியா மற்றும் சீன இடையே கிழக்கு லடாக் பகுதியில், மே மாதம் முதல், எல்லை பிரச்சினை வெடித்தது. மே மாதம் 5ம் தேதி மற்றும் 6ம் தேதி இந்தியா மற்றும் சீன ராணுவ வீரர்கள் இடையே, கைகலப்பு ஏற்பட்டது. ஏப்ரல் இறுதிவரை நிலைமை சரியாக இருந்த நிலையில், மே மாதம் முதல்தான், இந்த தொல்லைகள் ஆரம்பித்தன.
சுமார் 5000 ராணுவ வீரர்களை சீனா எல்லையில், நிலைநிறுத்தியது. சில செயற்கைக்கோள் புகைப்படங்கள் சீன தரப்பு பீரங்கி உள்ளிட்ட ஆயுதங்களை குவித்து வைத்திருப்பது தகவலை அம்பலப்படுத்தியது.
இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகள் 5 மணி நேரம் பேச்சு.. எல்லை பிரச்சினை முடிவுக்கு வருமா?
பேச்சுவார்த்தை
இந்த நிலையில்தான், இருநாட்டு தரப்பிலும் பிராந்திய அளவிலான ராணுவத் தலைவர்கள் மட்டத்தில் சுமார் 12 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. எனவே ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்கு இந்திய தரப்பு கோரிக்கை விடுத்திருந்தது. இதனை சீனா ஏற்றுக் கொண்டதையடுத்து சீன நாட்டு எல்லைக்குள் உள்ள மால்டோ என்ற பகுதியில் இன்று காலை 11.30 மணிக்கு பேச்சுவார்த்தை கூட்டம் துவங்கியது. சுமார் 5 மணிநேரங்கள் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இரு தரப்பின் முக்கிய அதிகாரிகள்
இந்திய தரப்பு பேச்சு வார்த்தைக் அளவிற்கு லெப்டினன் ஜெனரல் ஹரிந்தர் சிங் தலைமை வகித்தார். சீன தரப்புக்கு மக்கள் விடுதலை ராணுவத்தின் (பி.எல்.ஏ) தெற்கு சிஞ்சியாங் ராணுவ பிராந்தியத்தின் தளபதியாக இருக்கும் மேஜர் ஜெனரல் லியு லின் தலைமை வகித்தார். சீன மற்றும் இந்திய நாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான இன்றைய பேச்சு வார்த்தையின் போது எந்த மாதிரி விஷயங்கள் பேசப்பட்டன என்பது தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
ஏப்ரல் மாத நிலைமை தொடர வேண்டும்
ராணுவம் நேரடியாக இது தொடர்பான எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை என்ற போதிலும், ராணுவ வட்டாரங்கள் தெரிவித்ததாக சில ஆங்கில ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தி அம்சம் இதுதான்: ஏப்ரல் மாத இறுதியில் எந்த மாதிரியான ஒரு நிலை இருந்ததோ அதே மாதிரி, அவரவர் எல்லை இருக்க வேண்டும் என்பது இந்திய தரப்பு வலியுறுத்திய அம்சம். அதேநேரம் சீன எல்லைப்புறங்களில் சாலைகள் அமைக்க கூடிய திட்டங்களை இந்தியா கைவிட வேண்டும் என்று சீன தரப்பு வலியுறுத்தியுள்ளது. ஆனால், இதற்கு இந்தியா சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்திய பிராந்தியத்துக்கு உள்ளே சாலைகள் அமைப்பதை சீனா எதிர்க்க கூடாது. இவ்வாறு எதிர்ப்பதில் எந்த முகாந்திரமும் இல்லை என்று இந்திய தரப்பு வலியுறுத்திக் கூறியுள்ளது.
பாதுகாப்பு அமைச்சகம்
பேச்சுவார்த்தை நிறைவடைந்ததும் லே, பகுதிக்கு பேச்சுவார்த்தைக் குழு இன்று மாலை திரும்பியது. பேச்சுவார்த்தையில் எந்த மாதிரியான அம்சங்கள் இடம் பெற்றன என்பது பற்றி வடக்கு பிராந்திய ராணுவ கமாண்டர் லெப்டினண்ட் ஜெனரல் ஜோஷி, ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே ஆகியோருக்கு இந்த குழு தெரிவிக்கும். இதையடுத்து மத்திய பாதுகாப்பு அமைச்சகத்துக்கு, பேச்சுவார்த்தை அம்சங்களை ராணுவ தலைமை அனுப்பி வைக்கும்.