சீனாவுடன் உடன்படிக்கை.. பதற்றமான இடங்களில் படைகளை வாபஸ் வாங்க வேண்டும்.. இந்தியா வெளியிட்ட அறிக்கை!
டெல்லி: லடாக்கில் இருந்து சீனாவின் படைகள் முழுமையாக, வேகமாக வாபஸ் பெறப்படுவது குறித்து உடன்படிக்கை செய்யப்பட்டுள்ளது. இரண்டு நாட்டு அமைச்சர்கள் செய்த பேச்சுவார்த்தைகள் மூலம் இந்த உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் லடாக் பிரச்சனை குறித்து இந்தியா மற்றும் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இடையில் பேச்சுவார்த்தை நடந்தது. இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் இ இடையே இந்த பேச்சுவார்த்தை நடந்தது.
இதில் 5 உடன்படிக்கைகள் கொண்ட ஒப்பந்தம் போடப்பட்டது. அதற்கு முன் இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உடன் சீனா, ரஷ்யாவில் பேச்சுவார்த்தை நடத்தியது.
வின்டர் வந்தால் அவ்வளவுதான்.. இந்தியாவுடன் சமாதானம் செய்ய முயலும் சீனா.. பின்னணியில் ஒரே ஒரு காரணம்!
என்ன முடிவு
இந்த இரண்டு பேச்சுவார்த்தையில் சீனா லடாக்கில் படைகளை வாபஸ் வாங்குவது தொடர்பாக ஒருமித்த கருத்து ஏற்பட்டதாகவும், படைகளை வாபஸ் வாங்குவது தொடர்பாக இரண்டு நாடுகளும் உடன்படிக்கை செய்ததாகவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில், எல்லையில் சீனாவின் படைகள் துரிதமாக பின்வாங்குவது தொடர்பாகவும் முழுமையாக பின்வாங்குவது தொடர்பாகவும் உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மோதல் உள்ள இடங்கள்
மோதல் உள்ள இடங்களில் இருந்து எல்லாம் படைகளை வாபஸ் வாங்க வேண்டும் என்று இதில் உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எல்லையில் அமைதியை கொண்டு வருவது முக்கியம். இரண்டு நாடுகளும் அமைதியை நோக்கி நகர வேண்டும். அதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். எல்லையில் இரண்டு நாடுகளும் விதிகளை பின்பற்ற வேண்டும்.
கடுமையான விதிகள்
இதுவரை செய்யப்பட்ட ஒப்பந்தங்களை மீறும் வகையில் சீனா செயல்பட கூடாது. எல்லையில் வீரர்களை கட்டுக்குள் வைக்க வேண்டும். விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அமைதியான முறையில் பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வுகளை மேற்கொள்ள வேண்டும். ராணுவ, ராஜாங்க ரீதியான பேச்சுவார்த்தையை இரண்டு நாடுகளும் மேற்கொள்ள வேண்டும்.
தவறுகள் நடந்தால்
எல்லையில் தவறுகள் நடந்தால் அதை உடனே திருத்த வேண்டும். களத்தில் இருக்கும் சூழ்நிலையை புரிந்து கொண்டு உடனே படைகளை வாபஸ் பெற வேண்டும். அமைதியை ஏற்படுத்தும் வகையில் வீரர்கள் களத்தில் முடிவுகளை எடுக்க வேண்டும், என்று இரண்டு நாடுகளும் உடன்படிக்கை மேற்கொண்டு இருக்கிறது என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனாலும் எல்லையில் இரண்டு நாடுகளும் கடந்த ஒரு வாரமாக அதிக அளவில் படைகளை குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.