லடாக் பதற்றம்.. இந்தியா கொடுத்த அழுத்தம்... பின்வாங்குமா சீனா.. என்ன நிலை அங்கு?
டெல்லி: இந்தியாவுக்கும் சீனாவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தை நடந்த முடிந்துவிட்ட நிலையில், சீன இராணுவ வீரர்கள் அவர்கள் ஊடுருவிய இடங்களிலிருந்து திரும்பிச் செல்வது என்பது குறித்து தெளிவில்லாமல் உள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
இரு நாடுகளின் மூத்த தளபதிகளுக்கு இடையிலான ஆறாவது சுற்று பேச்சுவார்த்தை கிழக்கு லடாக்கின் மோல்டோவில் சீன எல்லைப் பகுதிக்கு அருகில் நடந்தது.
லெப்டினன்ட் அளவிலான பேச்சுவார்த்தையில் வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவரும் கலந்து கொண்டார். செப்டம்பர் 10 ம் தேதி மாஸ்கோவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்தில் வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கருக்கும் அவரது சீன பிரதிநிதி வாங் யிக்கும் இடையிலான சந்திப்பின் பின்னணியில் இந்த 6வது பேச்சுவார்த்தை நடந்தன. காலை 9 மணிக்கு தொடங்கி இரவு 11 மணி வரை நடந்தது.
எல்லையில் தந்திரத்தை மாற்றிக் கொண்ட சீனா...டோக்லாம் பகுதியில் 13 ராணுவ தளங்களை அமைக்கிறது!!
எல்லை மேலாண்மை
இந்த பேச்சுவார்த்தையில் துருப்புக்களை விரைவாக வெளியேற்றுவது, பதற்றத்தை அதிகரிக்கக் கூடிய நடவடிக்கைகளைத் தவிர்ப்பது, எல்லை மேலாண்மை தொடர்பான ஒப்பந்தங்களை கடைபிடிப்பது, எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் அமைதியை மீட்டெடுப்பது போன்ற நடவடிக்கைகளுக்கு இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டனர்.
எல்லையை மாற்றக்கூடாது
இருதரப்பும் சேர்ந்து வெளியிட்ட செய்திக்குறிப்பில், தகவல்தொடர்புகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும், தவறான புரிதல்களைத் தவிர்ப்பது மற்றும் கூடுதல் படைகளை எல்லைக்கு அனுப்புவதைத் தவிர்ப்பது போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்க முடிவு செய்யப்பட்டது.ஆனால் ரகசிய குறிப்பில், ஒருதலைப்பட்சமாக நிலைமையை மாற்றுவதைத் தவிர்ப்பது, நிலைமையை சிக்கலாக்கும் நடவடிக்கைகளை எடுப்பதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டது.
இந்தியா அழுத்தம்
இந்தியா சீனாவிடம் பாங்காங் திசோ பகுதியில் மோதலுக்கு வழிவகுக்கும் அனைத்து இடங்களிலும் இருந்தும் சீன படைகள் முழுமையாக விலக வேண்டும். அத்துமீறிய இடங்களில் இருந்து சீனா முதலில் படைகளை வாபஸ் பெற வேண்டும் என்றும் கூட்டத்தில் இந்தியா அழுத்தம் கொடுத்தது.
பலமுறை முயற்சி
எனினும் இந்த பேச்சுவார்த்தையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் சீனத் துருப்புக்கள் தொடர்ச்சியான அத்துமீறல்களைத் தொடங்குவதற்கு முன்னர் இருந்த இடத்திற்கே தற்போது சென்றுவிடுவார்களா என்பது குறித்து அவர்கள் குறிப்பிட்டார்களா என்பது உடனடியாகத் தெரியவில்லை. ஏனெனில் கடந்த வாரங்களில், இந்திய துருப்புக்களை அவர்கள் மீண்டும் கைப்பற்றிய பாங்காங் ஏரியைச் சுற்றியுள்ள உயரங்களில் இருந்து வெளியேற்ற சீனா பலமுறை முயற்சிகளை மேற்கொண்டனர்
எதையும் செய்வோம்
கடந்த வாரம், சீனாவுக்கு ஒரு வலுவான எச்சரிக்கை இந்தியா தரப்பில் விடுக்கப்பட்டது, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியா "இறையாண்மை பிரச்சினைகள் குறித்து மிகவும் தீவிரமானது" என்றும், அது பராமரிக்கப்படுவதை உறுதிசெய்ய "அனைத்து விளைவுகளுக்கும்" தயாராக இருப்பதாகவும் கூறினார். முன்னதாக அவர் மாஸ்கோவில் நடந்த பேச்சுவார்த்தை குறித்து பேசிய ராஜ்நாத் சிங் பிரச்சினையை அமைதியான முறையில் தீர்க்க விரும்புகிறது இந்தியா. ஆனால் இந்தியாவின் இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்பதையும் தெரிவித்தார். எனவே எல்லையில் இருந்து சீனா ஏப்ரல் மாதத்தில் இருந்த நிலைக்கு செல்லுமா அல்லது தொடருமா என்பது வரும் நாட்களில் தெரியவரும்.