ஓயாத எல்லை விவகாரம்: 3 மாதங்களுக்குப் பின்.... இந்தியா- சீனா இடையே இன்று 12-வது சுற்று பேச்சுவார்த்தை
டெல்லி: எல்லையில் படைகளை விலக்குவது தொடர்பாக இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகளிடையே இன்று 12-வது சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்தியா- சீனா இடையே 3 மாதங்களுக்குப் பிறகு இப்பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
Recommended Video
லடாக் எல்லையில் கால்வன் பள்ளத்தாக்கில் இந்தியா- சீனா ராணுவ வீரர்களிடையேயான மோதல் நிகழ்ந்து ஓராண்டாகிறது. அம்மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். சீன ராணுவத்தினரும் கணிசமான எண்ணிக்கையில் கொல்லப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து இருநாடுகளிடையே பல்வேறு நிலைகளில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ராணுவ அதிகாரிகள் நிலையில் இதுவரை 11 முறை பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.
இன்று பேச்சுவார்த்தை
இந்த பேச்சுவார்த்தைகள் எல்லை கட்டுப்பாட்டுப் பகுதியில் இந்திய, சீனா பகுதிகளில் நடைபெற்றன. இதன் தொடர்ச்சியாக இன்று சீனாவின் மால்டோ எல்லைப் பகுதியில் 12வது சுற்று பேச்சுவார்த்தை இன்று நடைபெற்று வருகிறது. இருநாடுகளும் எல்லையில் படைகளை விலக்கிக் கொள்வது என முடிவு செய்து படைகளைத் திரும்பப் பெற்றிருக்கின்றன. ஆனால் சீனாவைப் பொறுத்தவரையில் இந்தியாவின் அத்தனை எல்லைகப் பகுதிகளிலும் ராணுவ கட்டமைப்பை வலுவாக்கிக் கொண்டே வருகிறது.
மால்டோ எல்லையில்..
அண்மையில் திபெத், பூட்டானின் டோக்லாம் உள்ளிட்ட எல்லை பகுதிகளில் போர் விமானங்களுக்கான விமானப் படை தளங்களை சீனா அமைத்து வருவதாக செய்திகள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் கடந்த 14-ந் தேதி ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் போது சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீயுடன் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போதே இருநாடுகளிடையே 3 மாதங்களாக நடைபெற உள்ள எல்லை பிரச்சனை பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவது என முடிவு செய்யப்பட்டிருந்தது. இதனடிப்படையில் இன்று மால்டோ பகுதியில் இருநாடுகளின் ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
சீனா- பாகிஸ்தான்
இந்த நிலையில் சீனாவின் வர்த்தகப் பாதையை ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக மேற்கொள்ள பாகிஸ்தான் ஒப்புதல் தெரிவித்திருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது இருதரப்பு உறவில் பதற்றத்தை ஏற்படுத்தியது. பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் குரேஷி, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ அண்மையில் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்புக்குப் பின்னர் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தது. பாகிஸ்தான் ஆக்கிரமித்திருக்கும் ஜம்மு காஷ்மீர் பகுதிகளும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான் என திட்டவட்டமான பதிலை மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இந்தியாவின் நிலப்பகுதி
இது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த மத்திய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, சீனா அமைக்கப் போகும் வர்த்தகப் பாதை இந்தியாவுக்கு சொந்தமானது. பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருக்கிறது. இது தொடர்பாக சீனாவிடம் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய தேர்தலை இந்திய அரசு ஏற்காது; நிராகரிக்கிறது என கூறியிருந்தார்.
ஜின்பிங் திபெத் பயணம்
அத்துடன் சீனா அதிபர் ஜி ஜின்பிங் அண்மையில் திடீரென திபெத் பயணம் மேற்கொண்டிருந்தார். இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் பாய்ந்தோடும் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே பிரமாண்ட அணை கட்டும் திட்டத்தை ஆய்வு செய்யத்தான் ஜின்பிங் திபெத் சென்றதாக கூறப்படுகிறது. சீனாவின் இந்த திட்டத்தை பகிரங்கப்படுத்தியவர் அமெரிக்கா எம்.பி. டெவின் நூன்ஸ். திபெத்தை முன்வைத்து சீனா வகுத்து வரும் ரகசிய திட்டம் சர்வதேச நாடுகளில் விவாதப் பொருளாகி உள்ளது. எல்லைகளில் படைகளை விலக்குவதாக கூறிக் கொண்டே ராணுவ தளங்களை வலுவாக்குவது; இந்தியாவுடன் நட்புறவை விரும்புகிறோம் என கூறிக் கொண்டே இந்தியாவுக்கு எதிராக அனைத்து வகைகளிலும் வியூகம் வகுப்பது என்பது சீனாவின் பாணி. இந்த நிலையில் எல்லைப் பேச்சுவார்த்தையில் இருநாட்டு ராணுவ அதிகாரிகளும் முக்கிய முடிவை எடுக்க வாய்ப்புள்ளதா? என்பது எதிர்பார்ப்புக்குரியது.