இந்தியா- சீனா ராணுவ தளபதிகள் இடையேயான 9-ம் கட்ட பேச்சுவார்த்தை- படைகுறைப்பு குறித்து முடிவு வருமா?
டெல்லி: இந்தியா- சீனா ராணுவ தளபதிகள் இடையேயான 9-ம் கட்ட பேச்சுவார்த்தை ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையிலாவது எல்லைகளில் படைகுறைப்பு தொடர்பான முடிவு எட்டப்படுமா? என்பது எதிர்பார்ப்பு.
கால்வன் பள்ளத்தாக்கில் சீனா கடந்த ஆண்டு மே மாதம் ஊடுருவ முயன்றது. இதனை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இந்த மோதலில் 20 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
சீனா தரப்பில் 40க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதனால் இருநாடுகளிடையேயான உறவில் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து இரு நாட்டின் ராணுவம், வெளியுறவுத் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதுவரை 8 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. ஆனால் இந்த பேச்சுவார்த்தைகளில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமையன்று 9-வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. சூசுல் செக்டாருக்கு எதிரே உள்ள மால்டோ பகுதியில் இருநாட்டு ராணுவ தளபதிகள் இடையே இப்பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
எல்லையில் சீனா ராணுவ வீரர்கள் எண்ணிக்கையை குறைக்காத வரையில் இந்தியாவும் படை குறைப்பை மேற்கொள்ளாது என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியிருந்தார். இந்த நிலையில் 9-வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.