லடாக் பதற்றம்: இந்தியா-சீனா ராணுவ கமாண்டர்கள் இடையே இன்று 7-வது கட்ட பேச்சுவார்த்தை
டெல்லி: இந்தியா- சீனா ராணுவ கமாண்டர்கள் இடையே திங்கள்கிழமையன்று 7-வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
லடாக் கிழக்கு எல்லையில் சீனா தொடர்ச்சியான ஊடுருவல் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதனை இந்திய ராணுவ வீரர்கள் உயிரை கொடுத்து தடுத்து நிறுத்தி வருகின்றன.
இதென்ன புதுக்கதை..சீனா ஆதரவுடன் காஷ்மீரில் மீண்டும் 370-வது பிரிவு அமலுக்கு வரும்... பரூக் அப்துல்லா
இதுவரை 6 கட்ட பேச்சுவார்த்தை
லடாக் கிழக்கு மோதல்களில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். சீனா தரப்பிலும் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து இருநாடுகளிடையே இதுவரை 6 கட்டங்களாக பல்வேறு நிலைகளில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளன.
7-வது கட்ட பேச்சு
இதன் 7-வது கட்டப் பேச்சுவார்த்தை திங்கள்கிழமையன்று லடாக்கில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த சுசூல் பகுதியில் நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் இருதரப்பும் எல்லைகளில் படைகுவிப்பை நிறுத்துவது தொடர்பான விவாதிக்கப்பட உள்ளது.
மத்திய அரசு ஆலோசனை
இந்திய தரப்பில் என்ன விஷயங்கள் வலியுறுத்தப்பட வேண்டும் என்பது தொடர்பாக மத்திய அரசின் China Study Group (CSG) வெள்ளிக்கிழமையன்று ஆலோசனை நடத்தியது. இதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் கூட்டு தளபதி பிபின் ராவத், முப்படைகளின் தளபதிகள் பங்கேற்றனர்.
சீனா கோரிக்கை நிராகரிப்பு
பாங்கோங் ஏரியின் தென்பகுதி உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் இருந்து இந்திய படைகளை திரும்பப் பெற வேண்டும் என்ற சீனாவின் வேண்டுகோளை இந்திய தரப்பு முற்றாக நிராகரிக்க முடிவு செய்திருக்கிறது. சீனாவுடனான பேச்சுவார்த்தையின் போது இந்த நிலைப்பாடு வலியுறுத்தப்பட உள்ளதாம். பேச்சுவார்த்தை நடத்த செல்லும் இந்திய குழுவுக்கு லெப். ஜெனரல் ஹரீந்தர்சிங் தலைமை வகிக்க உள்ளார்.
பங்கேற்பது யார்?
அவருடன் லெப்.ஜெனரல் பிஜிகே மேனன், கிழக்கு ஆசிய விவகாரங்களுக்கான வெளியுறவு அமைச்சக இணை செயலாளர் நவீன் ஶ்ரீவத்சவா உள்ளிட்டோரும் பேச்சுவார்த்தையில் பங்கேற்கின்றனர். சீனா 60,000 ராணுவ வீரர்களை குவித்திருப்பதாக அண்மையில் வெளியான செய்திகள் குறித்தும் இந்திய குழு இந்தப் பேச்சுவார்த்தையில் சுட்டிக்காட்டி திரும்பப் பெற வலியுறுத்தும் என்கின்றன டெல்லி தகவல்கள்.