இந்தியா-சீனா இடையே தொடரும் உரசல்.. 6ம் தேதி உயர்மட்ட அளவில் பேச்சுவார்த்தை.. பலத்த எதிர்பார்ப்பு
டெல்லி: கிழக்கு லடாக் அருகே இரு நாட்டு ராணுவ வீரர்களின் எல்லை மோதலுக்கு இடையே, ஜூன் 6 சனிக்கிழமை, இந்தியாவும் சீனாவும் லடாக்கில் ராணுவ அளவிலான பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளன.
இந்த பேச்சுவார்த்தைகள் சுஷுல்-மோல்டோவில் உள்ள இந்திய பார்டர் பாயிண்ட் பகுதியில் நடைபெறும். இந்திய தரப்புக்கு 14 கார்ப்ஸ் கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் தலைமை தாங்குவார்.
பிராந்திய ராணுவத் தளபதிகளின் பல பேச்சுவார்த்தைகள் இதுவரை எந்த முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. பதற்றம் அதிகரித்தபடியே உள்ளதால், அடுத்தகட்ட பேச்சுவார்த்தையை, ராணுவத் தரப்பு முன்னெடுத்து வருகிறது.
1962 இல் ஒரு சிறு யுத்தத்தை இந்தியாவும், சீனாவும் நடத்தின. அதன்பிறகு ஒரு துப்பாக்கி குண்டும், இரு தரப்பிலிருந்தும், புறப்பட்டது கிடையாது. ஆனால், டோக்லாமில், இப்போது லடாக்கில் ஏற்பட்டதை போன்ற நேரடி பூசல் 2017ல் ஏற்பட்டது. கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் அந்த பிரச்சினை நீடித்தது. பின்னர் பரஸ்பரம் சரியானது.
லடாக் மற்றும் சிக்கிமில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு அல்லது எல்.ஐ.சி வழியாக நடத்தப்படும், வழக்கமான ரோந்துக்கு சீன ராணுவம் தடையாக இருப்பதாக இந்திய ராணுவம் குற்றம்சாட்டியது. இதன்பிறகுதான், இரு படைகளுக்கிடையில் பதற்றம் அதிகரித்து வருகிறது.
பொறுத்தது போதும்.. பொங்கிய அமெரிக்கா.. சீன விமானங்கள் தங்கள் நாட்டுக்குள் நுழைய அதிரடி தடை
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லை பதற்றம் குறித்துதான், பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் செவ்வாய்க்கிழமை இரவு தொலைபேசியில் நடத்திய ஆலோசனையில் முக்கிய இடம் பிடித்தது என்று தகவல் வெளியாகியது. இந்த நிலையில், நடைபெற உள்ள பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்தியா-சீனா இடையே மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாகவும் ட்ரம்ப் அறிவித்திருந்தார்.