கோத்தபய ராஜபக்சேவிற்கு போன் போட்ட மோடி.. சீனாவிற்கு செக் வைக்க திட்டம்.. இந்தியா மாஸ்டர் பிளான்!
டெல்லி: சீனாவிற்கு செக் வைக்கும் வகையில் பிரதமர் மோடி இன்று இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே மற்றும் மொரிஷியஸ் பிரதமர் பிராவின் ஜூக்நாத் உடன் தொலைபேசியில் பேசினார். இரண்டு நாடுகளிலும் பொருளாதார ரீதியான முதலீடுகளை செய்ய அவர் ஆலோசனை மேற்கொண்டார்.
Recommended Video
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் தற்போது எல்லையில் மோதல் ஏற்பட தொடங்கி உள்ளது. சிக்கிம் மற்றும் லடாக் எல்லையில் இரண்டு நாடுகளும் தொடர்ந்து மோதி வருகிறது. இது எப்போது வேண்டுமானாலும் பெரிதாக வெடிக்க வாய்ப்புள்ளது.
இந்த நிலையில் சீனாவிற்கு எதிராக ஆசியாவில் இருக்கும் சிறு சிறு நாடுகளை ஒன்று திரட்ட இந்தியா முயன்று வருகிறது. பாகிஸ்தான், நேபாளம் சீனாவிற்கு ஆதரவாக இருப்பதால் இந்தியா இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளது.
4 எல்லைகளுக்கு குறி.. அடுத்தடுத்த மீறல்.. இந்தியா எல்லையில் தொடர்ந்து சீண்டும் சீனா.. என்ன நடக்கும்?
மோடி பேசினார்
இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று காலை இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே உடன் பேசினார். போனில் இவர்கள் உரையாடினார்கள். இந்தியா - இலங்கை உறவை வலுப்படுத்தும் வகையில் இதில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இலங்கையில் இந்தியா கூடுதல் முதலீடுகளை செய்யும் என்றும், இந்தியாவின் தனியார் நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்யுமென்றும் மோடி இதில் வாக்குறுதி அளித்தார்.
இலங்கை உறவு
ஏற்கனவே கடந்த வருட அறிவிப்பின் மூலமே இலங்கைக்கு இந்தியா 400 மில்லியன் டாலர் வளர்ச்சி நிதியாக கடன் அளிக்க முடிவு செய்தது. அதேபோல் தீவிரவாதத்தை எதிர்ப்பதற்காக 50 மில்லியன் டாலர் உதவி செய்வதாக கடந்த வருடம் அறிவித்தது. தற்போது அதற்கும் மேல் கூடுதலாக உதவி செய்வதாக இந்தியா அறிவித்துள்ளது. சீனா உடன் இலங்கை நெருக்கம் ஆவதை தடுக்கும் விதமாக இந்த முடிவை இந்த எடுத்துள்ளது.
சீனா உறவு
கோத்தபாய ராஜபக்சே இந்தியாவில்தான் படித்தவர். ஆனாலும் அவர் சீனாவிற்கும் கொஞ்சம் நெருக்கம் ஆனவர். இதனால் அவர் அதிபர் ஆனதில் இருந்தே இந்தியா அவரை தன் பக்கம் இழுக்க முயன்று வருகிறது. அவர் அதிபராகி சில மணி நேரங்களில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் அவரை போய் சந்தித்தது குறிப்பிடத்தக்கது. இலங்கைக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் தர இதுதான் காரணம் என்கிறார்கள்.
அதிக நெருக்கம்
ஆனால் இலங்கைக்கு சீனா ஏற்கனவே நெருக்கமாக உள்ளது. இலங்கையின் கொழும்பில் உள்ள துறைமுகத்தை சீனா ஏற்கனவே 99 ஆண்டுகளுக்கு ராணுவம் இல்லாத செயல்பாட்டிற்கு குத்தகைக்கு எடுத்துள்ளது. இதை மீறி, இலங்கை மீது ஆதிக்கம் செலுத்த இந்தியா முயன்று வருகிறது. இன்னொரு பக்கம் மொரிஷியஸ் மீதும் இந்தியா கவனம் செலுத்துகிறது. பிரதமர் மோடி மொரிஷியஸ் பிரதமர் பிராவின் ஜூக்நாத் உடன் தொலைபேசியில் பேசினார்.
குட்டி நாடு
அதில், மொரிஷியஸுக்கு பொருளாதார மற்றும் மருத்துவ ரீதியான உதவிகளை வழங்குவதாக மோடி உறுதி அளித்துள்ளார். ஏற்கனவே மொரிஷியஸுக்கு இந்தியா மருத்துவ குழு மற்றும் மருத்துவ உபகாரணங்களை அனுப்பி உள்ளது. அதன் ஒரு கட்டமாக தற்போது மேலும் பொருளாதார உதவிகளை செய்வதாக, புதிய முதலீடுகளை செய்வதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். சீனாவிற்கு எதிரான செயலாக இது பார்க்கப்படுகிறது.
சீனாவிற்கு செக்
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் பிரச்சனை வந்தால் அதில் ஆசியாவில் இருக்கும் சிறிய நாடுகளின் பங்கு அதிக முக்கியத்துவம் பெறும். முக்கியமாக இந்தியாவிற்கு அருகே இருக்கும் இலங்கை வங்கதேசம் போன்ற நாடுகள் அதிக முக்கியத்துவம் பெறும். இதனால் தற்போது இந்தியா இலங்கை போன்ற நாடுகளை தங்கள் பக்கம் இழுத்து சீனாவிற்கு செக் வைக்க முயன்று வருகிறது.