இந்தியாவில் ஊழல் மிகுந்த மாநிலங்கள் பட்டியல் வெளியீடு.. தமிழகம் எத்தனையாவது இடம் தெரியுமா?
டெல்லி: நாட்டிலேயே அதிக ஊழல் மிகுந்த மாநிலமாக ராஜஸ்தான் முதலிடத்திலும், பீகார் இரண்டாவது இடத்திலும் உள்ளதாக டிராஸ்பரன்ஸி இண்டர்நேசனல் அமைப்பின் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் இந்த பட்டியலில் 8வது இடத்தை பிடித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அரசியல் மற்றும் அரசு சாரா அமைப்பான டிராஸ்பரன்ஸி இண்டர்நேசனல் அமைப்பு, நாட்டில் ஊழல் மற்றும் லஞ்சம் குறித்து கணக்கெடுப்பு நடத்தியது. அந்த அறிக்கையை இந்தியா ஊழல் அறிக்கை-2019 ('India Corruption Survey-2019') என்ற பெயரில் வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் 20 மாநிலங்களில் உள்ள 248 மாவட்டங்களில், 2 லட்சத்திற்கும் அதிகமான மக்களிடம் டிராஸ்பரன்ஸி இண்டர்நேசனல் அமைப்பு கணக்கெடுப்பு நடத்தியதாக தெரிவித்துள்ளது.
மாநிலங்கள் விவரம்
அந்த அறிக்கையில் பல்வேறு தரப்பினர் லஞ்சம் கொடுத்து காரியம் சாதித்திருப்பதாக கூறிய தகவல்கைளை அடிப்படையாக வைத்து எந்த மாநிலத்தில் அதிக ஊழல் நடந்துள்ளது என்பதாக ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது.
பீகார் 2வது இடம்
அதில் நாட்டிலேயே அதிக ஊழல் நடந்த மாநிலமாக ராஜஸ்தான் மாநிலம் பட்டியலிடப்பட்டுள்ளது. அங்கு 78% பேர் லஞ்சம் அளித்திருப்பதாக கூறியுள்ளதால் முதலிடத்தை பிடித்திருக்கிறது. இரண்டாவது இடத்தை பீகார்(75%) மாநிலமும், 3வது இடத்தை ஜார்க்கண்ட் மாநிலமும்(74%) பிடித்துள்ளன.
கர்நாடகா 7வது இடம்
4வது இடத்தை உத்தரப்பிரதேச மாநிலமும் (74%), ஐந்தாவது இடத்தை தெலுங்கானா மாநிலமும் (67%), 6வது இடத்தை பஞ்சாப் மாநிலமும் (63%), 7வது இடத்தை கர்நாடகா மாநிலமும் (63%) பிடித்துள்ளன.
62 சதவீதம் பேர்
8வது இடத்தை தமிழகம் பிடித்துள்ளது. இங்கு அரசு வேலைகளுக்காக 62 சதவீதம் லஞ்சம் கொடுத்துள்ளதாக கூறியுள்ளனராம். 35 சதவீதம் பேர் பல முறையும், 27 சதவீதம் பேர் ஒரு முறை அல்லது இரண்டு முறையும் லஞ்சம் கொடுத்திருப்பதாக கூறியுள்ளனராம். தமிழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் பங்கேற்றவர்களில் 8 சதவீதம் பேர் மட்டுமே லஞ்சம் கொடுக்காமல் இருந்திருப்பதாக கூறியதாக டிராஸ்பரன்ஸி இண்டர்நேசனல் அமைப்பு தெரிவித்துள்ளது.
குஜராத், ஹரியானா
ஊழல் குறைவாக நடக்கும் மாநிலங்கள் பட்டியலில் கோவா, ஒடிசா, கேரளா, ஹரியானா மாநிலங்கள் உள்ளதாக டிராஸ்பரன்ஸி இண்டர்நேசனல் அமைப்பு தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலம் தான் நாட்டிலேயே ஊழல் குறைந்த மாநிலம் என்றும் இந்த மாநிலத்தில் லஞ்சம் குறைவாக இருப்பதாகவும் தனது கணக்கெடுப்பில் அந்த அமைப்பு கூறியுள்ளது.