நேரடியாக மூக்கில் செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்து... விரைவில் சோதனையை தொடங்கும் பாரத் பயோடெக்
டெல்லி: நேரடியாக மூக்கின் வழியே செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்தின் சோதனையை விரைவில் தொடங்கவுள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் சீரம் மற்றும் பாரத் பயோடெக் ஆகிய நிறுவனங்களின் தடுப்பூசிகளுக்குக் கடந்த வாரம் அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி விரைவில் நாடு முழுதும் தடுப்பூசி செலுத்தப்படும் பணிகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் சீரம் நிறுவனம், பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் கொரோனா தடுப்பு மருந்தை உற்பத்தி செய்கிறது. அதேநேரம் பாரத் பயோடெக் நிறுவனம் சொந்தமாகத் தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ளது.
போலியோவை விரட்டியது போல் கொரோனாவையும் இந்தியாவில் இருந்து விரட்டுவோம் - அமைச்சர் ஹர்ஷவர்த்தன்
மூக்கில் செலுத்தப்படும் தடுப்பூசி
மூக்கில் நேரடியாகச் செலுத்தக்கூடிய கொரோனா தடுப்பு மருந்து தொடர்பான ஆராய்ச்சியில் தற்போது ஈடுபட்டு வருவதாகவும் இதற்காக வாஷிங்டன் பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்த மேற்கொண்டுள்ளதாகவும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணா எலே தெரிவித்தார். மேலும், இரண்டு டோஸ்களாக அளிக்கப்படும் தடுப்பு மருந்திற்குப் பதிலாக ஒரே டோஸ் தடுப்பு மருந்து குறித்து ஆராய்ச்சி செய்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், மூக்கின் வழியாகவே கொரோனா வைரஸ் நம் உடலுக்குள் நுழைவதாகவும் எனவே மூக்கில் செலுத்தும் தடுப்பூசி சிறப்பானதாக இருக்கும் என்றும் கூறினார்.
அதிக பலனளிக்கும்
மூக்கின் வழியே செலுத்தப்படும் தடுப்பு மருந்து வழக்கமாக ஊசி மூலம் செலுத்தப்படும் தடுப்பு மருந்தைக் காட்டிலும் அதிக பலனை அளிக்கும் என்பதற்கு போதிய ஆதாரங்கள் உள்ளதாக டாக்டர் சந்திரசேகர் கில்லூர்கர் கூறியுள்ளார். மூக்கில் செலுத்தப்படும் தடுப்பு மருத்துவ சோதனைகளைத் தொடங்க அனுமதி கோரி விரைவில் பாரத் பயோடெக் நிறுவனம் தலைமை மருத்துக் கட்டுப்பாட்டு அமைப்புக்கு விண்ணப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாக்பூரில் சோதனை
உரிய அனுமதிக்குப் பிறகு இந்த மூக்கில் செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து சோதனைகள் விரைவில் நாக்பூர், புனே, புபனேஷ்வர், ஹைதராபாத் ஆகிய நான்கு நகரங்களில் தொடங்கப்படும். முதல்கட்டமாக 18 முதல் 65 வயதுடைய 40 தன்னார்வலர்களிடம் இந்த தடுப்பு மருந்து சோதனை செய்யப்படவுள்ளது.
ஒன்றல்ல இரண்டு
பாரத் பயோடெக் நிறுவனம் இதுபோல இரண்டு மூக்கில் செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்து குறித்த ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலைக்கழகத்துடனும் வாஷிங்டன் பல்கலைக்கழகத்துடனும் பாரத் பயோடெக் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அமெரிக்காவில் ஏற்கனவே இந்த வகை தடுப்பு மருந்துகளின் சோதனை தொடங்கப்பட்டுள்ளன. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் இந்த வகை தடுப்பு மருந்துகள் முக்கிய பங்காற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மூக்கில் செலுத்தப்படும் தடுப்பு மருந்து என்றால் என்ன
ஊசி மூலம் செலுத்தப்படும் தடுப்பூசிகள் போல இல்லாமல், இவை நேரடியாக மூக்கின் வழியே உடம்பிற்குள் செலுத்தப்படுகிறது. இது குறித்து வாஷிங்டன் ஸ்கூல் ஆஃப் மெடிசின் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில், நாசி மூலம் செலுத்தப்படும் தடுப்பு மருந்து உடலில் வலுவான நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கியது தெரிய வந்தது. மேலும். இவை சுவாசக்குழாய் மூலம் வைரஸ் உள்ளே நுழைவதையே தடுக்கிறது என்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டது.
தடுப்பூசிகளை விட சிறந்ததா
முதல்கட்ட ஆய்வுகளில் மூக்கில் செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்து ஊசிகளில் செலுத்தக்கூடிய தடுப்பு மருந்துகளைவிடச் சிறப்பாகவே வேலை செய்கிறது. இந்த வகை தடுப்பு மருந்துகள் மொத்த நுரையீரலையும் பாதுகாப்பதால் வைரஸ் மற்றவர்களுக்குப் பரவாமல் தடுத்து நிறுத்தப்படுகிறது. மேலும், இவை மூக்கின் வழியே செலுத்தப்படுவதால் ஊசி மற்றும் சிரஞ்சுகளின் பயன்பாடும் குறைக்கப்படுகிறது.