ரஷ்யாவுக்கு பெரும் பின்னடைவு.. ஸ்பூட்னிக்-வி தடுப்பூசிக்கு இந்தியா வைத்த அதிரடி செக்!
டெல்லி: ரஷ்யாவின் ஸ்பூட்னிக்-வி கொரோனா தடுப்பூசி எப்படி வேலை செய்கிறது 'என்பது குறித்து பெரிய ஆய்வை நடத்த விரும்பிய டாக்டர் ரெட்டிஸ் லேபரேட்டரீஸ் லிமிடெட் நிறுவனம், அதற்கான இந்திய அரசிடம் விண்ணப்பித்தது. ஆனால் மத்திய அரசோ, முதலில் சிறிய அளவில் சோதனை செய்து பாருங்கள். பிறகு பார்க்கலாம் என்று கையை விரித்துவிட்டது. இது ரஷ்யாவிற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
உலகின் மிக அதிக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாடாக அடுத்த சில வாரங்களில் இந்தியா அமெரிக்காவை முந்தி முதலிடத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,835,655 ஆக உள்ளது. முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 7,776,224 ஆக உள்ளது. கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் தான் உலகிலேயே ஒரு நாளில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. உயிரிழப்பும் அதிகமாக உள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஒடிசாவின் கஞ்சம் மாவட்டம் அருமை.. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் பாராட்டு
இந்தியாவில் விற்க ஒப்பந்தம்
எனவே ரஷ்யா தான் கண்டுபிடித்து வைத்துள்ள ஸ்பூட்னிக்-வி கொரோனா மருந்தை இந்தியாவில் சந்தைப்படுத்த விரும்பியது. இதற்காக இந்தியாவின் டாக்டர் ரெட்டிஸ் லேபரேட்டரீஸ் லிமிடெட் நிறுவனத்துடன் ஸ்பூட்னிக் V ஐ விற்பனை செய்யும் ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் (RDIF) ஒப்பந்தம் போட்டது. இதன்படி டாக்டர் ரெட்டி நிறுவனம், ரஷ்யா உடன் இணைந்து இந்தியாவில் தடுப்பூசி விநியோகிக்கப்போவதாக கூட்டாக அறிவித்தது.
தரவுகள் இல்லை
இதன்பின்னர் மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் (சி.டி.எஸ்.கோ) நிபுணர் குழுவிடம் டாக்டர் ரெட்டிஸ் லேபரேட்டரீஸ் லிமிடெட் நிறுவனம், ஸ்பூட்னிக்-வி கொரோனா தடுப்பூசி எப்படி வேலை செய்கிறது ‘என்பது குறித்து பெரிய ஆய்வை நடத்த விரும்புவதாக விண்ணப்பித்தது. இதை பரிசீலித்த மருந்து தரக்கட்டுபபாட்டு அமைப்பு,
அந்த தடுப்பூசி குறித்த பரிந்துரைகள், வெளிநாடுகளில் நடத்தப்படும் ஆரம்ப கட்ட ஆய்வுகளின் பாதுகாப்பு மற்றும் நோயெதிர்ப்புத் திறன் தரவுகள் குறைந்த அளவே உள்ளன. இந்திய பங்கேற்பாளர்களுக்கு எந்த தகவல்களும் கிடைக்கவில்லை.
ரஷ்யாவிற்கு பின்னடைவு
எனவே முழு சோதனைகள் செயல்முறைக்கு போகும் முன்பு சிறிய அளவில் சோதனை செய்து பாருங்கள் பிறகு பார்க்கலாம் என்று அறிவித்துள்ளது. இந்தியாவின் இந்த நடவடிக்கை தடுப்பூசியை விற்கும் ரஷ்யாவின் திட்டத்திற்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
மருத்துவர்கள் கவலை
கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு ஒழுங்குமுறை ஒப்புதல் அளித்த முதல் நாடு என்ற பெருமையை ரஷ்யா பெற்றுள்ள போதிலும், அந்த மருந்து மீது சந்தேகமே அதிகமாக உள்ளது. ஏனெனில் முழு அளவிலான சோதனைகள் நிறைவடைவதற்கு முன்பே ஒழுங்குமுறை ஒப்புதல் கொடுத்துவிட்டது. ரஷ்யாவின் இந்த செயலை மேற்கத்திய விஞ்ஞானிகள் ஏற்கவில்லை. மருந்தின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் குறித்து விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் கவலை தெரிவித்தனர்.
நிச்சயம் பின்னடைவு
எனவே மத்திய அரசு ஸ்பூட்னிக்-வி கொரோனா தடுப்பூசி குறித்த பெரிய அளவிலான சோதனைக்கு மறுத்திருப்பது, இந்தியாவில் அந்த மருந்துக்கு ஒப்புதல் பெறுவதற்கான முயற்சிகளை பின்னுக்குத் தள்ளி உள்ளது. இது ரஷ்யாவிற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.