சீனாவுக்கு பதிலடி தருவதில் தீவிரம்- மலாக்கா ஜலசந்தியில் போர்க் கப்பல்கள்- தயார் நிலையில் விமானப் படை
டெல்லி: லடாக் எல்லையில் 20 இந்திய ராணுவ வீரர்களின் உயிரை பறித்த சீனாவின் செம்படைக்கு பதிலடி தருவதில் இந்தியா படுதீவிரமாக நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது. மலாக்கா ஜலசந்தி பகுதிக்கு போர்க்கப்பல்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.
லடாக் பிராந்தியத்தின் கல்வான் (கால்வன்) பள்ளத்தாக்கு தங்களுக்கே உரியது என உரிமை கோருகிறது. இதுவரை இல்லாமல் இப்போதுதான் சீனா இப்படி உரிமை கோரி அடம்பிடிக்கிறது.
இந்தியா சீனா எல்லைப்பதற்றம்: வீர மரணம் அடைந்த 20 ராணுவ வீரர்களின் பெயர்கள் ரிலீஸ்
லடாக் கிழக்கு
இதனால்தான் எல்லையில் போர்ச் சூழல் உருவானது. இது தொடர்பாக சீனாவுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இதையும் மீறி கல்வான் பள்ளத்தாக்கில் முகாம் அமைத்தது சீனா. இந்த முகாமை அகற்றுவதற்காக இந்திய ராணுவ வீரர்கள் அதிகாரி சந்தோஷ்பாபு தலைமையில் களமிறங்கினர்.
இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சீன ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இதனால் இருதரப்பிலும் மோதல் வெடித்தது. இம்மோதல்களில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பில் 43 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
பிரதமர் எச்சரிக்கை
இது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சீனாவின் அத்துமீறிய தாக்குதலுக்கு எதிராக போராட்டங்கள், சீனா தேசிய கொடி எரிப்பு என தொடர்ந்து நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, லடாக்கின் கிழக்கில் வீரர்களின் உயிர்த் தியாகம் வீண் போகாது- உரிய பதிலடி தருவோம் என எச்சரித்திருக்கிறார்.
முப்படைகளும் தயார் நிலையில்
இந்த நிலையில் நாட்டின் முப்படைகளும் ஒரு யுத்த சூழலுக்கு தயாராகி வருகிறது. போர்க்கப்பல்கள் மலாக்கா ஜலசந்திக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தேவைப்பட்டால் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் போர்க் கப்பல்களை நிறுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. நாட்டின் விமானப் படையும் முழு வீச்சில் தயார் நிலையில் இருக்கவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. சீனாவின் அடாவடித்தனத்துக்கு ராணுவம் தக்க பதிலடி தரும் வகையில் முன்னகர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.