35 நாட்களில் 10 ஏவுகணைகள் சோதனை.. இந்தியா அதிரடி சாதனை.. சீனாவுக்கு செக்.. இனி வாலாட்டினால்...!
டெல்லி: கிழக்கு லடாக்கில் இந்தியா- சீனா இடையே ஏற்பட்ட மோதலால் பதற்றம் நிலவி வரும் நிலையில் கடந்த 35 நாட்களில் 10 ஏவுகணைகளை இந்தியா சோதனை செய்து சாதனை படைத்துள்ளது.
லடாக் எல்லையில் கடந்த மே மாதத்தில் சீன ராணுவம் இந்திய எல்லையில் அத்துமீறி நுழைய முயன்றன. அப்போது அவர்களை இந்திய ராணுவத்தினர் விரட்டியடித்தனர். இதையடுத்து ஜூன் மாதம் மீண்டும் சீனா ஊடுருவி இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது.
இதில் 20 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணமடைந்தார்கள். அதே போல் இந்திய வீரர்கள் திருப்பி தாக்கியதில் 40-க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் கொல்லப்பட்டனர். கடந்த 40 ஆண்டுகளில் முதல்முறையாக இரு தரப்பிலும் உயிரிழப்புகள் நேரிட்டன. அடுத்த 2 மாதங்களுக்குள் சீன ராணுவம் துப்பாக்கிச் சூட்டையும் நடத்தி முடித்தது.
முயற்சி
இரு நாட்டு எல்லைப் பகுதியை அமைதியின் பாதைக்கு திருப்புவதற்கு இரு தரப்பும் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் சீனாவே பேச்சுவார்த்தையின் போது வாலை சுருட்டிக் கொள்கிறது. அதன் பின்னர் எல்லையில் அதன் வேலையை காண்பிக்கிறது. இதனால் தொடர்ந்து பேச்சுவார்த்தை என்பது நடத்தப்பட்டு வருகிறது.
10 ஏவுகணைகள்
இது ஒரு புறம் இருக்க இந்திய ராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓ அண்மையில் ஏவுகணை சோதனைகளை அடுத்தடுத்து நிகழ்த்தியது. அடுத்த வாரத்தில் சப் சோனிக் ஏவுகணையான நிர்பயையும் சோதனை செய்யவுள்ளது. இந்த ஏவுகணைகள் எல்லாவற்றையும் சேர்த்து 10 ஏவுகணைகள் 35 நாட்களில் சோதிக்கப்பட்டு இருக்கின்றன.
வேகம்
இதுகுறித்து டிஆர்டிஓ அமைப்பை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில் இந்த ஏவுகணை பரிசோதனை என்பது வெறும் தற்செயல் நிகழ்வு அல்ல. லடாக்கில் இருந்து வெளியேற மறுக்கும் சீன ராணுவம் மீண்டும் பிரச்சினை செய்தால் பதிலடி கொடுப்பதற்காகவே இந்த பரிசோதனைகள் வேக வேகமாக நடத்தப்பட்டன.
அணு ஆயுதம்
இதுவரை ஏற்கெனவே நடந்த 9 பரிசோதனைகளில் பிரம்மோஸ் ஏவுகணை 400 கி.மீ. அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் பெற்ற சவுரியா சூப்பர்சோனிக் ஏவுகணை, நீர்முழ்கி எதிர்ப்பு டார்பிடோக்களை செலுத்தும் ஏவுகணைகள், அணு ஆயுத திறன்பெற்ற பிரித்வி 2 போன்றவை எல்லாம் முக்கியமானவையாகும்.