கொரோனா பாதிப்பு.. மற்ற நாடுகளைவிட இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ளது.. பிரதமர் மோடி பெருமிதம்!
டெல்லி: சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்ற நாடுகளை விட குறைவாக இருக்கிறது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டு இருக்கிறார் .
இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்றபடி ஒவ்வொரு நாளும் இந்தியாவில் செய்யப்படும் கொரோனா சோதனை எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த நிலையில் மத்திய அரசு சார்பாக கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், உத்தர பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் அமைக்கப்பட்ட உயர் திறன் பரிசோதனை மையங்கள் திறக்கப்பட்டது.
இதை இன்று பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். அதன்பின் பேசிய பிரதமர் மோடி, சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைவாக இருக்கிறது. கொரோனாவிற்கு எதிராக நாம் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறோம். குணமடையும் சதவிகிதம் இந்தியாவில் மிக அதிகம். மற்ற நாடுகளை விட இந்தியாவில் அதிக பேர் குணமடைகிறார்கள்.
இறப்பு சதவிகிதம் நம்முடைய நாட்டில் மிக மிக குறைவு. இதற்கு நம்முடைய கடுமையான உழைப்புதான் காரணம். உலகமே நம்மை பாராட்டுகிறது. நமக்கு போதுமான விழிப்புணர்வு உள்ளது. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் முழுமையாக குறையவில்லை. பல இடங்களில் இன்னும் கொரோனா வேகமாக பரவி வருகிறது.
அன்லாக் 3.0.. சினிமா தியேட்டர், ஜிம்கள் திறப்பா?.. முதல்வர்களுடன் இன்று பிரதமர் மோடி ஆலோசனை
நாம் உற்பத்தியை பெருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். மற்ற நாடுகளுக்கும் நமது உற்பத்தி பொருட்களை அனுப்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நாம் எல்லா இந்தியர்களையும் காக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நமது நாட்டில் தற்போது 11 லட்சம் கொரோனா பெட்கள் உள்ளது.
அதேபோல் 11 ஆயிரம் கொரோனா தடுப்பு மையங்கள் உள்ளது. பிபிஇ உடைகள், மாஸ்க், டெஸ்டிங் கிட்ஸ் மூலம் நாம் நிறைய சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறோம். இதற்கு முன் இந்தியா பிபிஇ கிட்களை உருவாக்கியதே இல்லை. இப்போது உலகிலேயே நாம்தான் பிபிஇ கிட்களை ஏற்றுமதி செய்யும் இரண்டாவது பெரிய நாடு. கடந்த ஆறு மாதத்தில் பிபிஇ கிட்களை உருவாக்கும் 1200 நிறுவனங்கள் இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளது.
3 லட்சம் வெண்டிலெட்டர்களை நம்மால் எல்லா வருடமும் இனி உருவாக்க முடியும். தற்போது திறக்கப்பட்டு இருக்கும் கொரோனா சோதனை மையங்கள் மூலம் ஒரே நாளில் 10 ஆயிரம் பேருக்கு சோதனைகளை செய்ய முடியும். வேகமாக கொரோனா சோதனைகளை செய்வதன் மூலம் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.