இரண்டு பக்கமும் ஜாகுவார், சுகோய்.. நடுவில் சீறி பாய்ந்த ரபேல்.. சீனாவிற்கு இந்தியா அனுப்பிய மெசேஜ்!
லடாக்கில் சீனா அத்துமீறி வரும் நிலையில் தற்போது ரபேல் விமானங்களை இறக்கி இந்தியா சீனாவிற்கு வலுவான மெசேஜ் ஒன்றை அனுப்பி உள்ளது.
டெல்லி: லடாக்கில் சீனா அத்துமீறி வரும் நிலையில் தற்போது ரபேல் விமானங்களை இறக்கி இந்தியா சீனாவிற்கு வலுவான மெசேஜ் ஒன்றை அனுப்பி உள்ளது.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே இந்தியாவின் விமான படையில் ரபேல் விமானங்கள் இணைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரபேல் விமானங்கள் இந்தியா வந்த நிலையில் தற்போது கூடுதல் விமானங்கள் இந்தியா வந்துள்ளது.
கடந்த 4 வருடங்களுக்கு முன் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி 36 ரபேல் விமானங்கள் இந்தியா வர வேண்டும். மீதி விமானங்கள் இந்தியாவில் ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனம் மூலம் , பிரான்சின் டஸால்ட் நிறுவனத்தின் உதவியுடன் தயாரிக்கப்படும்.
இந்திய விமானப்படை...ரபேல் தெரியும்...இந்த ஊழல் தெரியுமா...அதிரடி ரெய்டு!!
10வது விமானம்
இந்தியாவிற்கு ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் ஒரு ரபேல் விமானம் வந்தது. அதன்பின் 5 ரபேல் விமானங்கள் ஜூலை 29ம் தேதி வந்தது. இந்த ரபேல் விமானங்கள் இந்திய விமானப்படையுடன் இணைக்கப்பட்டது. இதற்கான இணைப்பு விழா திருவிழா போல நடந்தது. ஹரியானாவில் இருக்கும் அம்பாலா படைத்தளத்தில் இந்த விமானங்கள் இந்திய விமானப்படையுடன் இணைக்கப்பட்டது.
மீண்டும் வந்தது
இந்த நிலையில் இன்று கூடுதலாக 5 ரபேல் விமானங்கள் இந்திய ராணுவத்துடன் இணைக்கப்பட்டது. இதற்கான விழா அம்பாலாவில் நடந்து வருகிறது. ரபேல் விமானங்களை இந்திய ராணுவத்துடன் இணைக்கும் விழாவிற்கு பிரான்ஸ் பாதுகாப்பு துறை அமைச்சர் புளோரன்ஸ் பார்டி மற்றும் இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் வருகை புரிந்தனர்.
செம விழா
மிகப்பெரிய அளவில் இதற்காக அம்பாலாவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. முப்படை தளபதி பிபின் ராவத், விமானப்படை தளபதி ஆர்கேஎஸ் பாதுரியா, பாதுகாப்பு துறை செயலாளர் அஜய் குமார் ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர். இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்ட ரபேல் விமானங்களுக்கு அனைத்து மத சம்பிரதாயப்படி பூஜை செய்யப்பட்டது.
அணிவகுப்பு
அதன்பின் இந்த ரபேல் விமானம் வானத்தில் பறந்து அணிவகுப்பு நடத்தியது. 5 ரபேல் விமானங்கள் ஒன்றன்பின் ஒன்றாக பறந்து அணிவகுப்பு நடத்தியது. அதன்பின் ரபேல் விமானங்களை சுற்றி இந்தியாவின் சுகோய் 30 மற்றும் ஜாகுவார் விமானங்கள் பறந்தது. 3 சுகோய் விமானங்களும் 3 ஜாகுவார் விமானங்களும் அம்பாலா படைத்தளத்தில் இருந்து வானத்தில் பறந்தது.
பிரான்ஸ்
இதில் ஜாகுவார், ரபேல் இரண்டும் பிரான்ஸ் நாட்டு தயாரிப்பு , சுகோய் ரஷ்யாவின் தயாரிப்பு. இந்த விமானங்கள் அம்பு போல வானத்தில் தோற்றத்தை ஏற்படுத்தி அணிவகுப்பை நடத்தியது. நடுவில் ரபேல் விமானங்கள் செல்ல இரண்டு பக்கமும் சுகோய் மற்றும் ஜாகுவார் விமானங்கள் பறந்து அம்பு போன்ற வடிவத்தை ஏற்படுத்தியது. இதன் மூலம் சீனாவிற்கு இந்தியா சிறப்பான மெசேஜ் ஒன்றையும் அனுப்பி உள்ளது.
என்ன மெசேஜ்
அதன்படி லடாக்கில் போர் வந்தால் அது கண்டிப்பாக விமானப்படை சார்ந்த போராகவே இருக்கும். ராணுவம், கடற்படையை விட , விமான படையே போரின் முடிவை மாற்றும் திறன் கொண்டதாக இருக்கும். இதனால் சீனாவிற்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்தியா இந்த விமானப்படை ஷோவை நடத்தி உள்ளது என்கிறார்கள். சீனாவிற்கு இந்தியாவின் விமானப்படை வலிமையை காட்டும் வகையில் இந்த நிகழ்ச்சியை இந்தியா நடத்தி உள்ளது.
இல்லை
சீனாவிடம் சுகோய் விமானங்கள் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 5ம் தலைமுறை விமானங்கள் நிறைய இருக்கிறது. அதேபோல் சீனாவிடம் ரபேலுக்கு பதில் ஜெ 20 போன்ற அதே திறன் கொண்ட விமானங்கள் உள்ளது. இதனால் சீனாவின் ஜெ வகை விமானங்களுக்கு பதிலடி கொடுக்க எங்களிடமும் விமானம் உள்ளது என்பதை பறைசாற்றும் விதமாக இந்தியா ரபேல் விமானங்களை களமிறக்கி உள்ளது.