21 நாட்களுக்கு ஒட்டுமொத்த இந்தியாவும் முடக்கம்- நள்ளிரவு முதல் அமலானது!
டெல்லி: கொரோனா தொற்று நோயின் தீவிர தாக்குதலைத் தடுக்கும் வகையில் 21 நாட்களுக்கு ஒட்டுமொத்தமாக இந்தியாவும் முடக்கப்படுகிறது. இது நள்ளிரவு 12 மணி முதல் நடைமுறைக்கு வந்தது.
Recommended Video
சீனா, இத்தாலி, பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைப் போல இந்தியாவிலும் கொரோனா வெகுவேகமாக பரவி வருகிறது. கொரோனாவின் தாக்கம் ஒவ்வொருநாளும் அதி தீவிரமாகி வருகிறது.
நாடு முழுவதும் கொரோனாவால் 560 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 11 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் கொரோனாவுக்கு முதலாவது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. மதுரையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 54 வயது நபர் உயிரிழந்தார்.
இதனிடையே நேற்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, கொரோனாவின் தீவிரத்தைத் தடுக்க 21 நாட்களுக்கு நாடு முடக்கப்படும் என்றார். 21 நாட்களுக்கு பொதுமக்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டால்தான் கொரோனாவில் இருந்து தப்பிக்க முடியும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
கையெடுத்து கும்பிட்டு கேட்கிறேன்.. வீட்டிலேயே இருங்க.. வெளியே போனால் கொரோனா உள்ளே வரும்- மோடி
இதனையடுத்து நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் லாக்டவுன் என்கிற முடக்கம் அமலுக்கு வந்தது. தமிழகத்தில் ஏற்கனவே நேற்று மாலை முதல் மார்ச் 31-ந் தேதி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.