இத்தாலியில் பரிதவித்த தமிழக மாணவர்கள் 55 பேர் உட்பட 218 இந்தியர்கள் நாடு திரும்பினர்
டெல்லி: இத்தாலியின் மிலன் நகரில் பரிதவித்து வந்த தமிழக மாணவர்கள் 55 பேர் உட்பட 218 பேர் பாதுகாப்பாக நாடு திரும்பியுள்ளனர்.
உலகை உலுக்கும் கொரோனா வைரஸ் தாக்குதலில் பல நாடுகளில் விமான சேவைகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில் சிறப்பு விமானங்கள் மூலம் தங்கள் நாட்டவரை மீட்கும் முயற்சிகளை ஒவ்வொரு நாடும் மேற்கொண்டும் வருகின்றன.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஈரானில் தத்தளித்த 234 இந்தியர்களையும் சிறப்பு விமானம் மூலம் இந்திய அரசு மீட்டது. இவர்களில் 131 பேர் மாணவர்கள். 103 பேர் யாத்ரீகர்கள்.
இதேபோல் இத்தாலியின் மிலன் நகரில் 200க்கும் அதிகமான இந்தியர்கள் தத்தளித்து வந்தனர். இவர்களை மீட்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வந்தது.
இதனையடுத்து ஏர் இந்தியாவின் சிறப்பு விமானம் மூலம் மிலன் நகரில் இருந்து 218 பேர் பாதுகாப்பாக இன்று காலை டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். இவர்களில் 211 பேர் மாணவர்கள்.
தமிழகத்தைச் சேர்ந்த 55 மாணவர்களும் டெல்லி வந்த விமானத்தில் வருகை தந்தனர்.