ஃபனி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சிறப்பு... ஐ.நா சபை பாராட்டு
டெல்லி: ஃபனி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டதாக இந்தியாவுக்கு ஐ.நா. பாராட்டு தெரிவித்துள்ளது.
கஜா, வர்தா புயல்களை விட மிக வலிமையான புயலாக உருவாகிய ஃபனி புயல், ஒடிசாவின் பூரி அருகே கரையை கடந்த போது, மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. காலை 8 மணிக்கு கரையைக் கடக்கத் தொடங்கிய புயலின் தாக்கம் காலை 11 மணி வரை இருந்தது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு, முகாம்களில் பத்திரமாக தங்க வைக்கப்பட்டனர். புயல் கரையை கடந்த போது, பொருட்சேதம் ஏற்பட்டாலும், உயிர்ச்சேதம் பெருமளவில் குறைக்கப்பட்டது. கடந்த 43 ஆண்டுகளில் இதுபோன்ற வலுவான புயல் ஒன்று உருவாகி கரையை கடந்ததில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
ஃபனி புயலால் சின்னாபின்னமான ஒடிசாவில் நீட் தேர்வு ஒத்திவைப்பு!
இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்திருக்கும் ஐ.நா, இந்திய வானிலை ஆய்வு மையம் ஃபனி புயலை துல்லியமாக கணித்து அரசுக்கு உதவியதாகவும் , முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டு, உயிர்ச்சேதங்களைத் குறைத்த இந்தியாவுக்கு, பாராட்டுகள் என்றும் ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது.
மேலும், சுமார் 11 லட்சம் பேரை 900 முகாம்களில் தங்க வைத்து, பெருமளவில் உயிரிழப்புகளை இந்தியா தவிர்த்துள்ளதாகவும், ஐக்கிய நாடுகள் சபையின் பேரிடர் ஆபத்து குறைப்பு முகமை பாராட்டியுள்ளது.