நேபாளம் - பாக். - சீனா.. ஒரே சமயத்தில் இந்தியாவை எதிர்க்கும் 3 நாடுகள்.. எப்படி ஒன்றாக திரண்டது?
டெல்லி: இந்திய வரலாற்றில் இல்லாத அளவிற்கு சீனா, பாகிஸ்தான், நேபாளம் என்று எல்லையில் இருக்கும் நாடுகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து வந்து இந்தியாவை எதிர்க்க தொடங்கி உள்ளது.
சீனா - இந்தியா இடையிலான உறவில் இன்று மிகவும் கசப்பான நாள், இரண்டு நாடுகளும் எதிர்காலத்தில் மறக்க நினைக்கும் ஒரு நாளாக இன்றைய தினம் மாறி இருக்கிறது. இந்தியா - சீனா ராணுவம் இடையே லடாக் எல்லையில் நேற்று இரவு நடத்த சண்டையில் இந்திய ராணுவ வீரர்கள் இரண்டு பேரும் ஒரு ராணுவ அதிகாரியும் வீர மரணம் அடைந்தனர்.
லடாக்கில் இருக்கும் கல்வான் பகுதியில் இந்த சண்டை நடந்துள்ளது. இன்னொரு பக்கம் பாங்காங் திசோ பகுதியில் இன்னும் தீவிரமான சூழ்நிலை நிலவி வருகிறது.
லடாக்.. மாநில முதல்வர்கள் மீட்டிங்கில் திடீரென கலந்து கொண்ட ராஜ்நாத் சிங்.. மோடியுடன் தீவிர ஆலோசனை!
சீனா கசப்பு
சீனாவுடன் இந்தியாவின் உறவு மிக மோசமான நிலையை அடைந்து உள்ளது. எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம் என்று நிலைமை ஏற்பட்டுள்ளது. 45 வருடங்களுக்கு பின் இப்படி எல்லையில் வீரர்கள் கொல்லப்படுகிறார்கள். இந்த சண்டை கண்டிப்பாக பேச்சுவார்த்தை மூலம் தீராது. இன்னும் பல வருடங்களுக்கு இந்த பிரச்சனை நீடிக்கும் என்று கூறுகிறார்கள். இனி வரும் நாட்களில் பதற்றம் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.
பாகிஸ்தான் நிலை
ஒரு பக்கம் சீனாவுடன் சண்டை இப்படி இருக்க பாகிஸ்தான் உடன் இந்தியாவின் உறவு மிக மோசமான நிலையை அடைந்துள்ளது. பாகிஸ்தான் உடன் காஷ்மீரில் சண்டை தீவிரம் அடைந்து வருகிறது. முதல் விஷயம், பாகிஸ்தான் காஷ்மீரின் ஷோபியான் எல்லையில் தொடர்ந்து படைகளை குவித்து அங்கு அத்துமீறல்களை நிகழ்த்தி வருகிறது. அதிலும் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் மிக அதிக அளவில் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்களை நிகழ்த்தி இருக்கிறது.
நேற்று என்ன
நேற்றும் கூட பாகிஸ்தானில் இந்தியாவை சேர்ந்த இரண்டு வெளியுறவுத்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பாகிஸ்தானில் உள்ள இந்திய வெளியுறவுத்துறையில் பணியாற்றும் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை அதிகாரிகள் ஆவர். எந்த தவறும் செய்யாத இவர்களை கைது செய்ய பாகிஸ்தான் போலீஸ், அவர்களை மோசமாக தாக்கி, அதன்பின் விடுதலை செய்துள்ளது. இந்தியாவை வேண்டும் என்றே பாகிஸ்தான் இப்படி சீண்டி இருக்கிறது.
என்ன பதிலடி
டெல்லியில் பணியாற்றிய பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் இரண்டு பேர் சில நாட்களுக்கு முன் நாடு கடத்தப்பட்டனர். தூதரக அதிகாரிகள் என்ற பெயரில் நாட்டிற்குள் வந்த அபித் ஹூசைன், தாஹிர் கான் இருவரும் உளவு வேலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் இருவரும் பாகிஸ்தானுக்கு மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டனர்.இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் இப்படி செய்துள்ளது.
வேறு என்ன
இன்னொரு பக்கம் இந்தியாவை மிக குட்டி இந்து நாடான நேபாளமும் சீண்டி வருகிறது. இந்திய - நேபாளம் இடையிலான உறவு மொத்தமாக முறியும் நிலையில் இருக்கிறது. இந்தியாவில் இருக்கும் லிபு லேக் பகுதியை தங்களுக்கு சொந்தமானது என்று நேபாளம் சொந்தம் கொண்டாடி வருகிறது.இந்தியாவில் இருக்கும் லிபு லேக், லம்பியாதூரா, கலபாணி ஆகிய பகுதிகளை நேபாளம் உள்ளே கொண்டு வந்து வரைபடமாக அந்த நாடு வெளியிட்டது. இந்த சண்டை விஸ்வரூபம் எடுத்துள்ளது.
பேச்சுவார்த்தை வரவில்லை
இந்தியா இப்படி பேச்சுவார்த்தைக்கு முயலும் நிலையில் இன்னொரு பக்கம் புதிய மேப்பிற்கான சட்ட திருத்த மசோதாவை மேலவையில் தாக்கல் செய்ய நேபாளம் முனைப்பு காட்டி வருகிறது. இந்தியா பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் கூட நேபாளம் ஒத்துழைக்கவில்லை. அதோடு நேபாளம் எல்லையில் பீகார் நபர் ஒருவர் நேபாளம் போலீஸ் மூலம் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் கூட நடந்தேறியது.
வங்கதேசம் எப்படி
இதெல்லாம் போக கடந்த ஜனவரியில் இருந்தே வங்கதேசம் இந்தியா மீது கோபத்தில் இருக்கிறது. சிஏஏ பிரச்சனை காரணமாக இந்தியா மீது மிக கடுமையான கோபத்தில் வங்கதேசம் இருக்கிறது. அப்போதே இரண்டு நாட்டு உறவில் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டு விட்டது. ஆப்கானிஸ்தான் உடன் மட்டுமே இந்தியா மோதவில்லை. ஆனாலும் ஆப்கானிஸ்தான் நமக்கு எப்போதுமே நெருக்கமான நாடாக இருந்தது இல்லை.
மிக மோசம்
இந்தியா சுதந்திரம் அடைந்த பின் முதல்முறையாக இப்படி மோசமான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. முதல் முறையாக இந்தியாவை மொத்தமாக எல்லையில் இருக்கும் மூன்று நாடுகள் ஒன்றாக எதிர்த்து வருகிறது. சீனா, பாகிஸ்தான், நேபாளம் என்று மிக கடுமையான நெருக்கடியை இந்தியா எதிர்கொள்ள தொடங்கி உள்ளது. மூன்று நாடுகளும் எல்லை பிரச்சனை, காஷ்மீர், லாடக், இமாலய மலைப்பகுதியை மையமாக வைத்தே இந்தியாவை எதிர்க்க தொடங்கி உள்ளது. இதையே எப்படி இந்தியா சமாளிக்கும், எப்படி பதிலடி கொடுக்கும் என்று கேள்வி எழுந்துள்ளது.