வேகமாக பரவும் கொரோனா வைரஸ்.. அமெரிக்கா செய்த அதே தவறை செய்யும் இந்தியா.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்
டெல்லி: அமெரிக்கா செய்த அதே தவறை இந்தியாவும் செய்து உள்ளது, இதற்கு மிக மோசமான விளைவுகளை கொடுக்க வேண்டி வரக்கூடும் என்று, COV-IND-19 ஸ்டடி குரூப் எச்சரித்துள்ளது. இந்த குரூப் கல்வியாளர்கள், டேட்டா அறிவியலாளர்கள் போன்றவர்களை உள்ளடக்கியதாகும்.
Recommended Video
இந்தியாவில் இன்று அதிகாலை 12 மணி முதல் 21 நாட்கள் லாக்டவுன் செய்யப்பட்டுள்ளதாகவும், யாரும் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என்றும் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ள நிலையில், இது போல ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது.
அந்த அறிக்கையில் கூறியுள்ள முக்கிய அம்சங்களை பார்த்தால், அமெரிக்கா எந்த தவறு செய்தது, இந்தியாவின் நிலை என்ன என்பது பற்றிய ஒரு பார்வை அதில் கிடைக்கக்கூடும். இது நாம் எந்த மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதற்கு பாடமாகவும் அமையும்.
சென்னையில் 350 படுக்கை கொண்ட கொரோனா சிறப்பு வார்டு ரெடி.. பல்நோக்கு மருத்துவமனையில் அதிரடி மாற்றம்
பரிசோதனை குறைவு
இந்தியா 11,500 பேருக்கு மட்டுமே பரிசோதனைகளை நடத்தி உள்ளது. இது மார்ச் 18ம் தேதி வரையிலான புள்ளிவிவரம். அந்த அடிப்படையில் இத்தனை பேருக்கு நோய் பாதிக்கப்பட்டு உள்ளது என்பதை அரசு அறிவித்துள்ளது. ஆனால் இந்த சோதனை எண்ணிக்கை என்பது மிகவும் குறைவாகும். இதை வைத்துக்கொண்டு நாம் கட்டுப்படுத்தி விட்டோம் என்று நினைத்துக் கொண்டிருப்பது தவறானது.
ஸ்டேஜ் முக்கியம்
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு எந்த ஒரு குறிப்பிட்ட மருந்து அல்லது தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், இதன் பரவல், இரண்டாவது மற்றும் மூன்றாவது ஸ்டேஜுக்கு சென்றுவிட்டால், அது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். ஏற்கனவே, இந்திய சுகாதாரத்துறை மற்றும் மருத்துவத்துறை மிகப் பெரிய பாரத்தை சுமந்து கொண்டிருக்கும் நிலையில், இப்படி ஒரு ஸ்டேஜுக்கு சென்றால் அதை நாடு தாங்கிக்கொள்ள முடியாது.
குறைந்த எண்ணிக்கை
உதாரணத்துக்கு, அமெரிக்காவையும், இத்தாலியையும் பாருங்கள். அங்கு மெதுவாகத்தான் வைரஸ் பரவ ஆரம்பித்தது. ஆனால் திடீரென மிகப்பெரிய எண்ணிக்கையில் அது வெடித்து கிளம்பியது. இந்தியா தற்போது கணக்கிட கூடியது குறைந்த அளவிலான சோதனைகள் முடிவில் வெளியாகி உள்ள தகவல்தான். இதைவிட பாதிப்பு அதிகமாக இருக்கக்கூடும். இப்போதே இப்படி என்றால், அது அடுத்த ஸ்டேஜ் செல்லும் போது, எந்த மாதிரி இருக்கும் என்பதை நினைத்துப் பார்க்க முடியாது.
அமெரிக்க நடைமுறை
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் விகிதம் என்பது அமெரிக்கா பின்பற்றிய கணக்கிடும் முறையைப் போலவே உள்ளது. குறைந்தபட்சம் 13 நாட்களுக்கு முந்தைய நிலவரத்தைதான் இப்போது சொல்வது போல இருக்கிறது. அமெரிக்காவிலும் முதலில் அப்படித்தான் நோயாளிகள் எண்ணிக்கை இருந்தது. இத்தாலியில் 11 நாட்களுக்குப் பிறகு மிக வேகமாக நோய் பரவியது. இந்தியா குறைந்த அளவில் நோயாளிகள் எண்ணிக்கையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. இவை அனைத்துமே அச்சத்தை ஏற்படுத்த கூடியவை.
மருத்துவமனை வசதி
இந்தியாவில் 1,000 பேருக்கு மருத்துவமனை படுக்கைகளின் எண்ணிக்கை 0.7 மட்டுமே. ஆனால், பிரான்சில் 6.5, தென் கொரியாவில் 11.5, சீனாவில் 4.2, இத்தாலியில் 3.4, இங்கிலாந்தில் 2.9, அமெரிக்காவில் 2.8, ஈரானில் 1.5. பெட் வசதி அதிகம் கொண்ட நாடுகளிலேயே, மருத்துவமனைகளில் இடம் கிடைக்காத அளவுக்கு நோயாளிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது என்பதை பாருங்கள். உடல்நலம் மற்றும் பொருளாதார குறியீடுகளை விடுங்கள், இந்தியாவில் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களில் சுகாதார மற்றும் முன் வரிசை தொழிலாளர்கள் உள்ளனர் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில், கொரோனாவால் 700க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.