கொரோனா தடுப்பு மருந்து.. உலக அளவில் இந்தியா முக்கிய பங்கு வகிக்க போகிறது.. பிரதமர் மோடி உறுதி
டெல்லி: கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் மற்றும் உற்பத்தியில் இந்தியா உலக அளவில் முக்கிய பங்கு வகிக்க போகிறது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா குளோபல் வீக் 2020 நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று பேசினார்.யுகேவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மீடியா நிறுவனமான இந்தியா ஐஎன்சி (India Inc) இந்த ''இந்தியா குளோபல் வீக் 2020 (India Global Week 2020)" நடத்தப்படுகிறது.
உலக நிறுவனங்கள், தலைவர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் முன்னிலையில் பேசினார். இந்த முறை ஜூலை 9 முதல் 11ம் தேதி வரை இந்த நிகழ்வு நடக்க உள்ளது.
இதில் பேசிய பிரதமர் மோடி தனது உரையில், பொருளாதார ரீதியாக இந்தியா பெரிய அளவில் மாற்றம் அடைந்து வருகிறது. இந்தியாவில் அதிக வளங்கள் நிறைந்து இருக்கிறது. இந்தியா மிக வேகமாக உலகின் முக்கியமான நாடாக மாறி வருகிறது. இந்தியாவில் இருக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலை நிறுவனங்கள் வேகமாக முன்னேறி வருகிறது. சிறு குறு தொழில் மேம்பாட்டுக்கு ஏராளமான நடவடிக்கைகள் எடுத்துள்ளோம்.
அவர்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம், பங்கு வகிக்கிறார்கள். இந்தியாவில் வளர்ந்து வரும் பல்வேறு துறைகளில் முதலீடுகள் காண வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.தொற்றுநோய்க்கு எதிரான போரை நடத்திக் கொண்டு பொருளாதார சீர்திருத்தத்தை மேற்கொள்கிறோம்.
அதிலும் இந்திய மருத்துவத்துறை மிக வேகமாக வளர்ந்து வருகிறது . கொரோனா பரவலுக்கு இடையே இந்தியா உலக நாடுகளுக்கு உதவி வருகிறது. மற்ற நாடுகள் போல இல்லாமல் இந்தியாவில் தடுப்பூசிகள், மருந்துகள் வேகமாக, குறைந்த விலையில் தயாரிக்கப்படுகிறது.
இந்தியா குளோபல் வீக் 2020: இந்தியர்கள் எதையும் சாதிக்கும் திறமை கொண்டவர்கள்.. பிரதமர் மோடி உரை!
இந்தியாவில் நிறைய தடுப்பு மருந்துகள் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் அதிகமாக இந்தியாவில்தான் தயாரிக்கப்படுகிறது.
கொரோனா தடுப்பு மருந்தை தயாரிப்பதில் இந்தியா வேகம் காட்டி வருகிறது. உலக அளவில் மருந்து உருவாக்கப்பட்டதும் உற்பத்தி அதிகரிக்கப்படும். இந்தியா இதில் முக்கிய பங்கு வகிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது, என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.