ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பு மருந்து...மனித பரிசோதனை... இந்தியாவில் 5 இடங்கள் தேர்வு!!
டெல்லி: ஆக்ஸ்போர்டு, ஆஸ்ட்ராஜெனிகா கண்டுபிடித்து இருக்கும் கொரோனா தடுப்பு மருந்தை இறுதிக் கட்டமாக இந்தியாவில் மனித பரிசோதனைக்கு உட்படுத்த ஐந்து இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இன்னும் சில வாரங்களில் மனிதர்களுக்கு இந்த மருந்து செலுத்தி பரிசோதிக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.
Recommended Video
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், ஆஸ்ட்ராஜெனிகா மருந்து நிறுவனமும் இணைந்து கொரோனா தடுப்பு மருந்துக்கான ஆய்வில் ஈடுபட்டுள்ளது. முதல் இரண்டு கட்ட பரிசோதனைகள் முடிந்து மூன்றாம் கட்ட பரிசோதனையில் ஈடுபட்டுள்ளன. இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் உடன் இணைந்து கொரோனா தடுப்பு மருத்து தயாரிக்க ஆக்ஸ்போர்டு மற்றும் ஆஸ்ட்ராஜெனிகா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.
கறுப்பர் கூட்டம் சுரேந்திரனை அடுத்து செந்தில்வாசன் மீதும் குண்டாஸ் பாய்ந்தது
ஒரு டோஸ் ரூ. 1000
இந்தியாவிலேயே அதிகளவில் தடுப்பு மருந்து தயாரிக்கும் நிறுவனம் சீரம். இந்த மருந்து இறுதிக்கட்ட ஆய்வில் வெற்றி பெறும்பட்சத்தில், இந்தியாவுக்கு சீரம் நிறுவனம் கொரோனா தடுப்பு மருந்து சப்ளை செய்யும். ஒரு டோஸ் ஆயிரம் ரூபாய்க்கு வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவித்துள்ளது.
இந்தியாவில் டேட்டா
இதுகுறித்து இந்திய பயோடெக்னாலாஜி துறை செயலாளர் ரேணு ஸ்வரூப் கூறுகையில், 'ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், ஆஸ்ட்ராஜெனிகா மருந்து நிறுவனமும் இணைந்து கண்டுபிடித்து இருக்கும் கொரோனா தடுப்பு மருந்து இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. மூன்றாம் கட்ட பரிசோதனைக்கு இந்தியாவில் ஐந்து இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த மருந்து குறித்த அனைத்து டேட்டாக்களும் நம்மிடம் இருக்க வேண்டியது அவசியமாகிறது.
சில வாரங்களில் ஆய்வு
இறுதிக்கட்ட பரிசோதனைக்கு ஐந்து இடங்கள் தேர்வு செய்யப்பட்டு தற்போது மூன்று இடங்கள் தயார் நிலையில் உள்ளன. நாங்கள் நிதியுதவி செய்யாவிட்டாலும், பரிசோதனைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருகிறோம். ஆக்ஸ்போர்டு, ஆஸ்ட்ராஜெனிகா இரண்டும் இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட்டை தேர்வு செய்துள்ளன. இன்னும் சில வாரங்களில் ஆய்வகங்களில் பரிசோதனை துவங்கிவிடும்'' என்றார்.
ஏற்கனவே மருந்து தயாரிப்பு
சீரம் இன்ஸ்டிடியூட் இந்த பரிசோதனை மேற்கொள்ள இந்திய மருந்து கட்டுப்பாட்டு மையத்தின் அனுமதியை பெற விண்ணப்பித்துள்ளது. இந்த இன்ஸ்டிடியூட் இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட மனித பரிசோதனைகளை இந்தியாவில் மேற்கொள்ளும். கொரோனா தடுப்பு மருந்து இறுதிக்கட்டத்தை எட்டுவதற்கு முன்பே மருந்து தயாரிப்பில் ஈடுபடும் என்று சீரம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது.
பிரிட்டனில் ஆய்வு
கடந்த ஏப்ரல், மே மாதங்களில் ஆக்ஸ்போர்டு, ஆஸ்ட்ராஜெனிகா தயாரிப்பு மருந்து பிரிட்டனில் இருக்கும் ஆய்வகத்தில் வைத்து 18 - 55 வயதுக்கு இடைப்பட்ட, 1,077 பேருக்கு செலுத்தப்பட்டது. இந்த முதல் கட்ட பரிசோதனை குறித்த தகவல்கள் தி மான்செட் மருத்துவ இதழில் வெளியாகி இருந்தது.
நீடிக்கும் எதிர்ப்பு சக்தி
இந்தப் பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டவர்களுக்கு மருந்து செலுத்தப்பட்ட 56 நாட்களில், டி செல்கள் நல்ல எதிர்ப்பு சக்தியை கொடுத்துள்ளன. நீண்ட நாட்களுக்கு இந்த எதிர்ப்பு சக்தி உடலில் இருக்கும் என்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இரண்டாம் கட்ட ஆய்வில் 100க் கணக்கில் பரிசோதனைக்கு மனிதர்கள் எடுத்துக் கொள்ளப்பட்டனர். இவர்களின் பாதுகாப்பு, எதிர்ப்பு சக்தி எந்தளவிற்கு இருக்கிறது என்று சோதிக்கப்பட்டது.
கோவாக்சின் மருந்து
இனி மூன்றாம் கட்ட ஆய்வுக்கு ஆயிரக்கணக்கானவர்கள் உட்படுத்தப்படுவார்கள் என்று தெரிய வந்துள்ளது. இந்தியாவில் ஏற்கனவே பாரத் பயோடெக் தயாரித்த கோவாக்சின் மருந்து மனித பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இது முதல் கட்ட ஆய்வுதான் என்பது குறிப்பிடத்தக்கது.