புதிய எல்லைச் சட்டத்தை இயற்றி பகீர் கிளப்பும் சீனா.. 'இது தவறானது'.. இந்தியா கவலை!
டெல்லி: சீனாவின் புதிய நில எல்லை சட்டத்திற்கு இந்தியா கவலை தெரிவித்துள்ளது. இதனால் இருதரப்பு ஒப்பந்தம் பாதிக்கப்படும் என்று இந்தியா கூறியுள்ளது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் பிரச்சினை இருந்து வருகிறது.
Recommended Video
லாடக் எல்லையில் சீனா அத்துமீறி கொடுத்த பிரச்சினை உலகத்துக்கே தெரியும். இது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் சில நாட்களுக்கு முன்பு சீன நாடாளுமன்றத்தில் எல்லை நில பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
எல்லை நில பாதுகாப்புச் சட்டம்
பிராந்திய இறையாண்மை மற்றும் எல்லைகளை குறைத்து மதிப்பிடும் எந்தவொரு செயலையும் சீனா எதிர்க்கும் என்று அந்த எல்லை நில பாதுகாப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக எல்லைப் பகுதிகளில் தேவைப்படும்போது போக்குவரத்து, தொலைத்தொடர்பு, கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பிற்கான கட்டமைப்புகள் உருவாக்கப்படும் என்று சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா கடும் கண்டனம்
மொத்தத்தில் சீனாவின் இறையாண்மையை பாதுகாக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள இந்தச் சட்டம் வரும் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என சீனா தெரிவித்துள்ளது. சீனாவின் இந்த சட்டம் எல்லை பகுதிகளில் மீண்டும் கொந்தளிப்பை ஏற்படுத்துவதுபோல் அமைந்துள்ளது. இந்த நிலையில் எல்லை நில பாதுகாப்புச் சட்டத்துக்கு இந்தியா கடும் கவலை தெரிவித்துள்ளது.
மிகவும் கவலையளிக்கிறது
இது தொடர்பாக இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:- எல்லை மேலாண்மை மற்றும் எல்லைப் பிரச்சினையில் தற்போதுள்ள இருதரப்பு பேச்சுவார்த்தை ஏற்பாடுகளில் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய ஒரு சட்டத்தை சீனா கொண்டு வந்துள்ளது. இது இந்தியாவுக்கு மிகவும் கவலையளிக்கிறது.
பலன் இல்லாமல் செய்து விடும்
ஏனெனில் இரு தரப்பும் சமமான அடிப்படையில் கலந்தாலோசனைகள் மூலம் எல்லைப் பிரச்சினைக்கு , நியாயமான மற்றும் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வைக் கோருவதற்கு ஒப்புக்கொண்டுள்ளன. சீனாவின் புதிய சட்டம் இவற்றுக்கு குந்தகம் விளைவிப்பது போல் உள்ளது. ஒருதலைப்பட்சமான நடவடிக்கையானது இந்தியா-சீனா ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு பலன் இல்லாமல் செய்து விடும் என்று இந்தியா கூறியுள்ளது.