சிக்கிம் எல்லையில் ஊடுருவல்.. அதிரடி பதிலடி கொடுத்து சீன வீரர்களை ஓட வைத்த இந்திய ராணுவம்!
டெல்லி: சிக்கிம் எல்லையில் சீன ராணுவத்தினரின் ஊடுருவலை இந்திய ராணுவம் அதிரடியாக முறியடித்தது. இதனால் ஏற்பட்ட மோதலில் சீன வீரர்கள் 20 பேர் காயமடைந்தனர்.
கடந்த வாரம் சீன ராணுவத்தினர் இந்திய எல்லையில் ஊடுருவியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து உயரதிகாரிகள் கூறுகையில் கடந்த வாரம் வடக்கு சிக்கிமின் நாகுலா பகுதியில் சீன ராணுவத்தினர் ஊடுருவினர். அப்போது அவர்களின் ஊடுருவலை இந்திய ராணுவத்தினர் முறியடித்தனர்.
அப்போது இரு தரப்பினரிடையே மோதல் போக்கு ஏற்பட்டது. இதில் சீனாவை சேர்ந்த 20 வீரர்கள் காயமடைந்தனர். இந்திய தரப்பில் 4 வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. வடக்கு சிக்கிமில் மோசமான வானிலை நிலவி வரும் நிலையிலும் சீன ஊடுருவலை இந்தியா முறியடித்துவிட்டது.
தற்போது சிக்கிமில் பதற்றம் நிலவி வருகிறது. எனினும் நிலைமை கட்டுக்குள் இருக்கிறது என தெரிவித்தனர்.
இந்திய- சீன எல்லையில் கடந்த ஆண்டு முதல் பதற்றம் நீடித்து வருகிறது. சீன ராணுவத்தினர் அவ்வப்போது இந்திய எல்லையில் ஊடுருவும் போக்கு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் லடாக் எல்லையில் பாங்சோ ஏரி பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைந்ததால் இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது மோதல் போக்கும் நீடித்தது.
லடாக் எல்லையில் பகுதியில் சீன ராணுவம் வீரர்களை குவித்து வருகிறது. அது போல் எல்லையில் ரோந்து பணியை இந்தியா மேற்கொள்வதற்கும் சீனா இடையூறு செய்கிறது. இதனால் சீன படைகளை சமாளிக்க இந்தியாவும் தன் படைகளை அனுப்பியது. இதனால் பாங்சோ ஏரி, கால்வன் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இதை தணிக்க அந்த பகுதிகளில் இரு நாடுகளின் ராணுவ உயரதிகாரிகள் பலகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்திவிட்டனர். எனினும் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்த நிலையில் நேற்றைய தினம் லடாக்கில் இந்தியாவும் சீனாவும் 9ஆவது சுற்று பேச்சுவார்த்தைகளை நேற்று நடத்தின.
இதில் படைகளை திரும்ப பெறுவதில் இரு தரப்பிலும் கருத்தொற்றுமை ஏற்படாததால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.