24 மணி நேரத்தில் புதிதாக 27,114 பேருக்கு கொரோனா.. இந்தியாவில் 10 நாட்களாக எகிறும் கேஸ்கள்
டெல்லி: இந்தியாவில் 24 மணி நேரத்தில் புதிதாக 27,114 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 8.20 லட்சமாக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 3-ஆவது இடத்திற்கு வந்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் 1-ஆம் தேதி முதல் தினமும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு புதிதாக பாதிப்புகள் ஏற்படுவதால் கொரோனா பாதிப்பு 7 லட்சத்திலிருந்து 8 லட்சத்திற்கு அதிகரித்தது.
பெரும்பாலான பாதிப்புகள் மகாராஷ்டிரத்திலிருந்து ஏற்பட்டவையாகும். இங்கு 2,38,461 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், தமிழகத்தில் 1,30,261 பேரும் டெல்லியில் 1,09,140 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
அது போல் குஜராத்தில் 40,069 பேரும் உத்தரப்பிரதேசத்தில் 33,700 பேரும், கர்நாடகத்தில் 33,418 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கடந்த 24 மணி நேரத்தில் 19,873 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள்.
காற்றில் குறுகிய தூரம் பரவும், அறிகுறி இல்லாதவர்களிடமிருந்தும் பரவும்: கொரோனா பற்றி WHO புது அப்டேட்
இதன் மூலம் இதுவரை 5,15,385 பேர் இந்தியாவில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள். அதனால் குணமடைவோர் சதவீதமும் 62.78 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு கூறுகையில் தீவிர கொரோனா சோதனையால் கொரோனா நோயாளிகள் விரைவாக கண்டறியப்படுகிறார்கள்.
லேசான அறிகுறி உள்ளவர்கள் கொரோனா பாதிக்கும் என சந்தேகத்துக்குரியவர்கள் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர் என்று தெரிவித்தது.