சாலை விபத்து உயிரிழப்புகளில் உலகளவில் இந்தியா முதல் இடம்.. தமிழ்நாட்டின் நிலை என்ன?.. ஷாக் ரிப்போர்ட்
டெல்லி: உலகில் சாலை விபத்துகளில் அதிகம் பேர் உயிரிழக்கும் நாடுகளில் இந்தியா முதல் இடத்தில் இருக்கிறது. மனித உயிர்கள் என்பது விலைமதிப்பற்றவை. ஒருவர் மரணத்தின் துயரம் அவரது அன்புக்குரிய, நெருங்கிய உறவுகளுக்கு மட்டுமே புரியும்.
கொரோனா போன்ற பல்வேறு கொள்ளை நோய்கள் மனித உயிர்களை பறித்து வருகின்றன. இதேபோல் அவ்வப்போது ஏற்படும் இயற்கை சீற்றங்களும் கொத்து, கொத்தாக உயிர்களை பிடுங்கி வருகின்றன. இவையெல்லாம் இயற்கையின் விதி. நம்மால் இதனை ஒன்றும் செய்து விட முடியாது.
சிவகாசி பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - மரத்தில் மீது தூக்கி வீசப்பட்ட தொழிலாளி பலி
சாலை விபத்துகள்
ஆனால் சாலை விபத்து மூலம் ஆண்டுதோறும் ஏராளமான உயிர்களை நாம் பறிகொடுத்து வருகிறோம். விபத்துக்கள் குறித்து இயற்கையின் மீது பழிபோட முடியாது. விதிகளை மீறி நமக்கு நாமே குழி தோண்டி கொள்வதுதான் விபத்துகள். முறையான விதிகளை பின்பற்றினால் சாலை விபத்துக்களுக்கு இங்கு இடமே இல்லை. ஆனால் இது தொடர்பாக நாம் அலட்சியமாக இருப்பதால்தான் அதிக மரணங்களை சந்தித்து வருகிறோம்.
3 ஆண்டுகள்
சாலை விதிகளை மீறியதால் இந்தியா என்ன விளைவுகளை சந்தித்து என்பதை நாடாளுமன்ற மக்களவையில் நேற்று மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அழுத்தம், திருத்தமாக சுட்டிகாட்டியுள்ளது. இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் ஏற்பட்ட சாலை விபத்துக்கள், இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை என்ன? என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பி எழுப்பினார். இதற்கு போக்குவரத்து அமைச்சகம் கொடுத்த பட்டியலை கீழே பாருங்கள்.
குறைந்துள்ளன
2017-ம் ஆண்டில் இந்தியாவில் 4,64,910 சாலை விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. இதற்கு அடுத்த ஆண்டான 2018-ம் ஆண்டு 4,67,044 சாலை விபத்துக்கள் பதிவாகி இருக்கின்றன. இது முந்தைய ஆண்டை விட அதிகமாகும். 2019-ம் ஆண்டில் நாட்டில் 4,49,002 சாலை விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை முந்தைய இரண்டு ஆண்டுகளை விட குறைந்து நமக்கு சற்று ஆறுதல் அளிக்கிறது.
தமிழ்நாடு முதல் இடம்
நமது தமிழ்நாட்டை பொறுத்தவரை ஆண்டுக்கு ஆண்டு சாலை விபத்துக்கள் குறைந்து வருவதை புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. அதாவது 2017-ம் ஆண்டில் 65,562 சாலை விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. 2018-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 63,920 ஆக சற்று குறைந்துள்ளது. 2019-ம் ஆண்டில் 57,228 சாலை விபத்துக்கள் தமிழ்நாட்டில் பதிவாகி இருக்கின்றன. இது முந்தையை ஆண்டுகளை விட மிகவும் குறைந்த எண்ணிக்கையாகும். ஆனாலும் இந்தியாவில் அதிக சாலை விபத்துக்கள் நடக்கும் மாநிலங்களில் தமிழ்நாடுதான் முதல் இடத்தில் இருந்து வருகிறது.
இந்தியா பர்ஸ்ட்
உலகில் அதிக சாலை விபத்துகள் நடக்கும் நாடுகளை பட்டியலிட்டோம் என்றால் நமது இந்தியா மூன்றாவது இடத்தில் அமர்ந்துள்ளது. உலக வல்லரசு நாடான அமெரிக்கா முதல் இடத்தில் இருக்கிறது. ஆசிய நாடான ஜப்பான் 2-வது இடத்தை பிடித்திருப்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. மொத்தம் 199 நாடுகளை பட்டியலிட்டதில் மேற்கண்ட நாடுகள் இந்த இடத்தை பிடித்துள்ளன.
அதிர்ச்சி
ஆனால் சாலை விபத்துகளில் அதிகம் பேர் உயிரிழக்கும் நாடுகளில் இந்தியா முதல் இடத்தில் இருப்பது மிகவும் சோகமான ஒன்றாகும். லட்சத்தில் 11 பேர் இந்தியாவில் சாலை விபத்துகளில் இறந்து வருகின்றனர் என்று புள்ளி விவரம் மேலும் அதிர்ச்சியை கொடுக்கிறது. எனவே சாலை விதிகளை முறையாக கடைப்பிடித்தால் இது போன்ற அவல நிலைக்கு நாடு தள்ளப்பட வேண்டிய அவசியமே இல்லை.
சாலை விதிகளை மதிக்கணும்
சாலை விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் உள்ளிட்ட தண்டனை கொடுக்கப்படுகின்றன. ஆனால் எந்த நேரமும் அரசும், அதிகாரிகளை கண்காணித்து கொண்டே இருக்க முடியாது. சாலை விதிகளை மதிக்க வேண்டும் என்று நமக்கு இயற்கையிலேயே தோன்ற வேண்டும். எனவே முறையாக சாலை விதிகளை கடைபிடிப்போம். விலைமதிப்பற்ற மனித உயிர்களை பாதுகாப்போம்.