அமெரிக்காவை அடுத்து "சீனுக்குள்" வந்த ஜப்பான்.. இந்தியாவோடு சீக்ரெட் போர் பயிற்சி.. கலக்கத்தில் சீனா
டெல்லி: அமெரிக்காவை தொடர்ந்து தற்போது இந்தியாவிற்கு ஆதரவாக ஜப்பானும் களமிறங்கி உள்ளது. சீனாவை எதிர்க்கும் வகையில் இந்தியா - ஜப்பான் ஆகிய இரண்டு நாடுகள் கடற்படை பயிற்சியை மேற்கொண்டு இருக்கிறது. இன்னும் பல்வேறு ராணுவ ரீதியான திட்டங்களை இரண்டு நாடுகளும் செயல்படுத்த உள்ளது.
இந்தியா சீனா இடையே லடாக்கில் நிலவி வரும் மோதலில் இந்தியாவிற்கு ஆதரவாக பெரிய நாடுகள் களம் இறங்க உள்ளது. இந்தியா எல்லையில் இருக்கும் நேபாளம், பாகிஸ்தான் போன்ற நாடுகள் இந்தியாவிற்கு எதிராக இருக்கும் நிலையில் மற்ற வல்லரசு நாடுகள் இந்தியாவிற்கு தீவிரமாக ஆதரவு தெரிவித்து வருகிறது.
அதிலும் இந்தியாவிற்கு ஆதரவாக போர் படைகளை அனுப்புவோம், சீனா எங்கெல்லாம் பிரச்சனை செய்கிறதோ அங்கெல்லாம் படைகளை அனுப்புவோம் என்று அமெரிக்கா வெளிப்படையாக தெரிவித்து இருந்தது.
ராணுவ தளபதி குவாசிம் சுலைமானி படுகொலை- அமெரிக்கா அதிபர் டிரம்புக்கு ஈரான் அதிரடி பிடிவாரண்ட்
ஜப்பான் எப்படி
இந்த நிலையில் தற்போது இந்தியாவிற்கு ஆதரவாக ஜப்பான் படைகளை அனுப்ப உள்ளது. முதற்கட்டமாக அதற்காக இந்தியா - ஜப்பான் இடையே கடற்படை ரீதியான கூட்டு பயிற்சி நடந்துள்ளது. ஆம் இரண்டு நாட்டு கடற்படைகளும் சேர்ந்து இந்திய பெருங்கடலில் கூட்டாக பயிற்சி நடத்தி இருக்கிறார்கள். கடந்த மூன்று வாரமாக திட்டமிடப்பட்டு, கடந்த சனிக்கிழமை இந்த பயிற்சி நடந்தது.
ரகசியம் ஏன்?
இந்தியா - ஜப்பான் ஆகிய கடற்படை கூட்டு பயிற்சி நடக்க போகிறது என்று முன்பே செய்திகள் வெளியானது. ஆனால் ஏனோ சனிக்கிழமை பயிற்சி நடக்கும் வரை அனைத்து தகவல்களும் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது. பயிற்சி சனிக்கிழமை நடந்து முடிந்தாலும் இன்றுதான் அது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியானது. இரண்டு நாட்டின் நவீன போர் கப்பல்களும் இந்த கூட்டு பயிற்சியில் இடம் பிடித்தது.
போர் கப்பல்
இந்தியாவோடு ஜப்பான் நடத்திய இந்த கடற்படை போர் பயிற்சியில் ஜெஎஸ் கஷிமா மற்றும் ஜெஎஸ் ஷிமாயூக்கி (JS Kashima and JS Shimayuki) ஆகிய ஜப்பானின் முன்னணி போர் கப்பல்கள் இடம்பெற்று இருந்தது. அதேபோல் இந்தியா சார்பாக ஐஎன்எஸ் ராணா, ஐஎன்எஸ் குலிஷ் ஆகிய போர் கப்பல்கள் இடம்பெற்று இருந்தது . ஒரு நாள் முழுக்க இரண்டு நாடுகளும் இந்திய கடல் எல்லையில் இப்படி பயிற்சியை மேற்கொண்டது.
சீனா எப்படி
இது சீனாவிற்கு விடுக்கப்பட்ட நேரடி எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது. டோக்லாம் பிரச்சனையின் போதே ஜப்பான் இந்தியாவிற்குதான் ஆதரவு அளித்தது. அதேபோல் கல்வான் சண்டையிலும் கூட இந்திய வீரர்களின் வீரமரணத்திற்கு ஜப்பான் இரங்கல் தெரிவித்து இருந்தது. அதோடு ஜப்பான் - சீனாவிற்கு இடையே கிழக்கு சீன கடல் எல்லையில் எல்லை பிரச்சனை நிலவி வருகிறது.
மோசமான நிலையில் சீனா
அங்கு ஜப்பான் கடல் எல்லைக்குள் சீனாவின் கப்பல்கள் அத்துமீற தொடங்கி உள்ளது. 2013க்கு பிறகு சீனாவின் போர் கப்பல்களும் ஜப்பான் அருகே அத்துமீற தொடங்கி உள்ளது. இதனால் ஜப்பானும் சீனா மீது கடுமையான கோபத்தில் இருக்கிறது. அதேபோல் சேனகாகு தீவுகளில் ஜப்பான் - சீனா இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது. இதனால் எதிரிக்கு எதிர் நண்பன் என்ற ரீதியில் இந்தியாவுடன் இணைந்து ஜப்பான் போர் பயிற்சியை மேற்கொண்டுள்ளது.
இன்னொரு காரணம்
இந்த போர் பயிற்சி சீனாவிற்கு எதிராக இன்னொரு அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அதன்படி சீனாவிற்கு எதிராக ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய நாடுகள் ஒன்றாக சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு Quad என்று பெயர். சீனாவிற்கு எதிராக குவாட் நாடுகள் ஒன்றாக சேர்வதற்கான ஆயத்தமாக இந்த போர் பயிற்சி பார்க்கப்படுகிறது. இதுதான் சீனாவை கலங்க வைத்துள்ளது .