பாதுகாப்பு, விண்வெளி துறையில் முதலீடு செய்ய வாங்க.. இந்திய-அமெரிக்க வர்த்தக உச்சிமாநாட்டில் மோடி உரை
டெல்லி: இந்தியாவின் உள்கட்டமைப்பு, பாதுகாப்பு மற்றும் விண்வெளித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதலீடு செய்வதற்கு அமெரிக்க தொழிலதிபர்கள் முன்வர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார்.
இந்திய அமெரிக்க வர்த்தக கவுன்சில் ஐடியாஸ் உச்சிமாநாடு இன்று மாலை 6 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இரவு 9 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
இந்த உரையில் மோடி கூறியதாவது: மனிதத்தை மையப்படுத்தி இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் வருங்கால உறவு இருக்கும் என்று நம்புகிறேன். இந்த உலகத்துக்கு சிறப்பான எதிர்காலத்தை வழங்க வேண்டிய தேவை உள்ளது.
6 வருடங்களில் மாற்றம்
சுயசார்பு இந்தியா என்ற திட்டத்தின் மூலமாக இந்த உலகத்துக்கு செழிப்பு மற்றும் வளமையை இந்தியா வழங்குவதற்கு தயாராக இருக்கிறது. இந்த முன்னெடுப்பில் அமெரிக்காவின் ஒத்துழைப்பை நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். கடந்த ஆறு வருடங்களில் இந்தியாவின் பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு திறந்து விடப்பட்டுள்ளது, சீர்திருத்தம் சார்ந்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
சீர்திருத்தங்கள்
அதிகரித்து வரக்கூடிய போட்டியை சமாளிக்கும் வகையிலான சீர் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வெளிப்படைத்தன்மை மற்றும் டிஜிட்டலைசேஷன் மற்றும் கொள்கையில் ஸ்திரத்தன்மையுடன் உள்ளோம். 'வாய்ப்புகளின் நாடாக' இந்தியா மாறி வருகிறது. அதற்கு உதாரணமாக சமீபத்தில் வந்த தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நகர்ப்புறங்களில் உள்ள மக்களை விட கிராமப்புறங்களில் இணையதள சேவை அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது. தொழில்நுட்பத் துறையில் இந்தியா அடைந்துவரும் வளர்ச்சிக்கு இது ஒரு சான்று.
சுகாதாரத்துறை வளர்ச்சி
தற்போது உலகத்தின் கவனம் இந்தியா பக்கம் திரும்பியுள்ளது. இந்தியா வெளிப்படையான மற்றும் வாய்ப்புகளை வழங்கக்கூடிய தேசமாக இருக்கிறது. அத்துடன் தொழில்நுட்பம் இங்கு மிகுந்து காணப்படுகிறது. இந்தியாவின் சுகாதாரத்துறை வருடத்திற்கு 22 சதவீதத்துக்கும் அதிகமான வளர்ச்சியுடன் விளங்குகிறது. மருத்துவ தொழில்நுட்பத்தில் எங்களது நிறுவனங்கள் வளர்ச்சியடைந்து வருகின்றன. டெலிமெடிசின் துறை சிறப்பாக செயல்படுகிறது. எனவே சுகாதாரத்துறையில் அமெரிக்க தொழிலதிபர்களின் முதலீடுகள் வரவேற்கப்படுகின்றன.
உள்நாட்டு விமான போக்குவரத்து
சிவில் ஏவியேஷன் எனப்படும் உள்நாட்டு விமானப் போக்குவரத்து மிக வேகமாக வளர்கிறது. அடுத்த 8 ஆண்டுகளில் இந்தியாவில் விமான பயணிகள் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்தியாவில் செயல்படக்கூடிய தனியார் விமான நிறுவனங்கள் 10 வருடங்களில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய விமான சேவையை துவங்க உள்ளன.
பாதுகாப்பு, விண்வெளித் துறை
அதே போன்று பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறையிலும் உங்களது முதலீடுகளை இந்தியா வரவேற்கிறது. இத்துறைகளில், அன்னிய நேரடி முதலீட்டின் உச்சவரம்பை 74 சதவீதமாக உயர்த்தியுள்ளோம். இந்தியா 2 பாதுகாப்பு காரிடார்களை உருவாக்கியுள்ளன. பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்திக்கு இவை உதவக் கூடும். ஒவ்வொரு ஆண்டும், அந்நிய நேரடி முதலீட்டில் இந்தியா புதிய உச்சங்களைத் வருகிறது. 2019-2020ம் ஆண்டில் 74 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான அன்னிய நேரடி முதலீடு ஈர்க்கப்பட்டது. அதற்கு முந்தைய ஆண்டை விட, இது 20 சதவீதம் அதிகமாகும். இவ்வாறு பிரதமர் மோடி தனது உரையில் தெரிவித்தார்.