தீவிரவாதிகளுக்கு ஓய்வூதியம் கொடுப்பவர்கள் நீங்க.. இம்ரான் கானின் அணு ஆயுத மிரட்டலால் இந்தியா ஆவேசம்
Recommended Video
டெல்லி: அணு ஆயுத தாக்குதல் நடைபெறும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியதற்கு இந்தியா எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
ஐநா சபையில் நேற்று, உரையாற்றிய இம்ரான் கான், "இரு நாடுகளுக்கும் இடையே போர் தொடங்கினால், எதுவும் நடக்கலாம். ஒரு நாட்டை அதைவிட 7 மடங்கு பெரிய நாடு, இந்த வாய்ப்புக்கு தள்ளிவிடுகிறது. இப்போது அந்த சிறிய நாட்டிடம் இருப்பது இரு சாய்ஸ்கள்தான். ஒன்று சரணடைவது, அல்லது சாகும்வரை சுதந்திரத்திற்காக போராடுவது.
நாங்கள் என்ன செய்யலாம்? இந்த கேள்வியை நானே என்னிடம் கேட்கிறேன். நாங்கள் போராடுவதையே தேர்ந்தெடுப்போம். ஒரு அணு ஆயுத நாடு இறுதிவரை போராடும்போது, அது எல்லைகளுக்கு அப்பாலும் விளைவுகளை ஏற்படுத்தும்," இவ்வாறு அவர் பேசினார்.
இதுபற்றி, இன்று, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக்கான, வெளியுறவுத்துறை, முதன்மை செயலாளர் விதிஷா மைத்ரா கூறுகையில், "அணுசக்தி பேரழிவை கட்டவிழ்த்துவிடுவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அச்சுறுத்தல் விடுத்துள்ளார். ஒரு ஸ்டேட்மேன்ஷிப்பாக இல்லாமல், பயங்கரவாதத் தொழிலின் முழு மதிப்புச் சங்கிலியையும் ஏகபோகமாகக் கொண்ட ஒரு நாட்டின் தலைவர் போல பேசியுள்ளார். இம்ரான் கான் பயங்கரவாதத்தை நியாயப்படுத்துவது வெட்கக்கேடானது மற்றும் தீங்கு விளைவிக்க கூடியது.
ஐ.நா. பட்டியலிட்டுள்ள தீவிரவாதிக்கு ஓய்வூதியம் வழங்கும் உலகின் ஒரே அரசு தங்களுடையது என்பதை பாகிஸ்தான் ஏற்றுக் கொள்ளுமா?
ஒசாமா பின்லேடனின் வெளிப்படையான பாதுகாவலர் பாகிஸ்தான் என்பதை, நியூயார்க் நகரத்தில் நின்று கொண்டு பிரதமர் இம்ரான் கான் மறுப்பாரா?
#WATCH Vidisha Maitra, First Secretary MEA exercises India's right of reply to Pakistan PM Imran Khan's speech says, "Can Pakistan PM confirm the fact it is home to 130 UN designated terrorists and 25 terrorist entities listed by the UN, as of today?" pic.twitter.com/vGFQH1MIql
— ANI (@ANI) September 28, 2019
ஐ.நா.வால் பட்டியலிடப்பட்ட 130 பயங்கரவாதிகள் மற்றும் 25 பயங்கரவாத அமைப்புகள், பாகிஸ்தான் நாட்டில் உள்ளன.
இப்போது பிரதமர் இம்ரான் கான் ஐ.நா. பார்வையாளர்களை பாக்கிஸ்தானுக்கு அழைத்திருக்கிறார். உலகம் அவரை அந்த வாக்குறுதியை மீறவிடாது என்பதை உணர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.