கொரோனா பாதிப்பை வைத்து.. இந்தியாவை 3 பகுதிகளாக பிரிக்க பிரதமருக்கு அதிகாரிகள் யோசனை!
டெல்லி: கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையை வைத்து இந்தியா 3 மண்டலங்களாக பிரிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
Recommended Video
இந்தியாவில் கொரோனாவால் 7000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அது போல் பலியானோரின் எண்ணிக்கை 200ஆக உயர்ந்தது. இந்த நிலையில் இந்தியாவில் லாக்டவுன் ஏப்ரல் 14-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
இந்த நிலையில் இந்தியாவில் பாதிப்பு அதிகமாக இருப்பதால் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என முதல்வர்கள் கோரியுள்ளனர். அது குறித்து ஆலோசனை நடத்த இன்று அனைத்து முதல்வர்களுடனும் வீடியோ கான்பிரன்சிங் மூலம் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஆலோசனை
லாக்டவுன் குறித்து கடந்த ஒரு வாரமாகவே மூத்த அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வந்தார். இந்த நிலையில் இந்த ஆலோசனையில் இருந்த அதிகாரிகள் ஒன் இந்தியாவுக்கு சில தகவல்களை வெளியிட்டுள்ளனர். அதில் உயிர் வாழ்வது முக்கியமா, இல்லை வாழ்வாதாரம் முக்கியமா என பார்த்தால் இரண்டுமே முக்கியமானது.
ஒட்டுமொத்த வளர்ச்சி
அதே சமயம் இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சி என்பது நெகட்டிவில் போய்விடக் கூடாது என்பதற்காக இந்தியாவில் லாக்டவுன் சீரான முறையில் தளர்த்தப்பட வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது போன்ற சூழலில் மக்களுக்கும் பாதிக்காத வகையிலும், பொருளாதாரமும் பாதிக்காத வகையிலும் ஒரு சமமான முடிவை எடுக்க வேண்டும் என சிலர் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
யோசனைகள்
மக்களின் உயிரும் காப்பாற்றப்பட வேண்டும். அதே சமயத்தில் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டியதும் முக்கியம் என பிரதமருக்கு கூறியுள்ளனர். அதன்படி சில யோசனைகளையும் அதிகாரிகள் தெரிவித்ததாக கூறுகிறார்கள். அதன்படி பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டியதன் பொருட்டு இந்தியாவை 3 மண்டலங்களாக பிரிக்க வேண்டும். சிகப்பு மண்டலம், மஞ்சள் மண்டலம், பச்சை மண்டலங்காக பிரிக்க யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாக்டவுன்
கொரோனாவால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட பகுதிகளை சிகப்பு மண்டலங்களாகவும், பாதிப்பு எண்ணிக்கை ஓரளவுக்கு பாதிக்கப்பட்ட பகுதிகளை மஞ்சள் மண்டலங்களாகவும், கொரோனா பாதிப்பே இல்லாத பகுதிகளை பச்சை மண்டலங்களாகவும் அறிவிக்க வேண்டும். அவ்வாறு சிகப்பு மண்டலங்களாக அறிவிக்கப்படும் பகுதிகளில் லாக்டவுன் தொடர வேண்டும்.
பொருளாதார ரீதியிலான நடவடிக்கைகள்
மஞ்சள் மண்டலமாக வகைப்படுத்தும் பகுதிகளில் பொருளாதாரத்தை உயர்த்தும் ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி அளிப்பது, அதே சமயம் மக்களின் நடமாட்டத்தை கண்காணிப்பது. அது போல் பச்சை மண்டலங்களாக பிரிக்கப்படும் பகுதிகளில் இயல்பு வாழ்க்கை திரும்ப வேண்டும். இந்தியாவில் 400 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பே இல்லை என கண்டறியப்பட்டுள்ளது. எனவே இங்கு பொருளாதாரத்தை உயர்த்தும் ரீதியிலான நடவடிக்கைகளை எடுக்கலாம் என அதிகாரிகள் ஆலோசனை வழங்கியதாக நம் ஒன் இந்தியாவுக்கு தகவல் கிடைத்துள்ளது.