2018ம் ஆண்டில் 1 கோடி பேருக்கு வேலை பணால்.. ஷாக் அடிக்கும் புள்ளி விவரங்கள்
டெல்லி:முன்எப்போதும் இல்லாத வகையில் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன. கிட்டத்தட்ட கடந்த 27 மாதங்களில் இல்லாத அளவு 8.46 சதவீதமாக அதிகரித்துள்ளது.
தொழிலாளர்களின் பங்களிப்பு குறைவதால், வேலையில்லா திண்டாட்டம் தொடர்வதாக தொழில்துறை அமைச்சகம், இந்திய பொருளாதார கண்காணிப்பகத்தின் புள்ளி விவரங்களின் அடிப்படையில் கூறியுள்ளது. இது தொடர்பான புள்ளி விவரங்களும் வெளியாகி உள்ளன.
அதன்படி, இந்தியாவில் நிலவும் வேலைவாய்ப்பின்மை என்ற தலைப்பில் அந்த புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த வகையில் வேலைவாய்ப்பின்மையின் சதவீதம் என்பது 7.38 சதவீதமாக உயர்ந்துள்ளது.
அதே ஆண்டு நவம்பர் மாதத்தில் அந்த சதவீதம் என்பது 6.62 ஆகவும், கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் 4.78 சதவீதமாகவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக கிராமப்புறங்களில் கடந்த 12 மாதங்களில் மட்டும் வேலைவாய்ப்பின்மை என்பது முன் எப்போதும் இல்லாத வகையில் உயர்ந்து உள்ளது.
கிட்டதட்ட 1.09 கோடி வேலைவாய்ப்புகள் பறிபோயிருக்கின்றன. புள்ளிகள் அடிப்படையில் பார்த்தால் 83 சதவீதத்துக்கும் அதிகம் என்பது கொஞ்சம் அதிர்ச்சியளிக்கும் விஷயமாகும்.
அதேபோன்று, வேலை அளிக்கும் நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்களின் பங்களிப்பும் குறைந்து கொண்டே வருகிறது.நகர்ப்புறங்களில் 13.84 என்ற அளவிலான வேலைவாய்ப்புகள், 13.66 ஆக சரிந்துள்ளதாகவும் புள்ளி விவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.