ஆக்ஸ்போர்ட் தடுப்பு மருந்தை பரிசீலனை செய்யும் இந்தியா... அவரச பயன்பாட்டிற்கு இன்று அனுமதி?
டெல்லி: பிரிட்டன் நாட்டில் ஆக்ஸ்போர்ட் தடுப்பு மருந்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவிலும் முதல் தடுப்பு மருந்தாக ஆகஸ்போர்ட் தடுப்பு மருந்திற்கு இன்று ஒப்புதல் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகில் இன்னும் கொரோனா வைரசின் தாக்கம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. குறிப்பாக, கடந்த சில வாரங்களுக்கு முன் பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரசும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதுள்ள சூழ்நிலையில் தடுப்பு மருந்தின் மூலம் மட்டுமே கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தடுப்பு மருந்திற்கு ஒப்புதல்
அமெரிக்காவின் ஃபைசர், மாடர்னா நிறுவனங்கள் தங்கள் தடுப்பு மருந்தின் சோதனையை முடித்துள்ளன. அதேபோல அஸ்ட்ராசெனகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து உருவாக்கிய தடுப்பு மருந்தின் மூன்றுகட்ட சோதனைகளும் நிறைவடைந்துள்ளன. அமெரிக்கா, பிரிட்டன், கனடா, மெக்சிகோ உள்ளிட்ட பல நாடுகளிலும் குறைந்தபட்சம் ஒரு தடுப்பு மருந்தின் அவசர பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்துள்ளன.
அனுமதி கோரி விண்ணப்பம்
இந்தியாவிலும் தங்கள் தடுப்பு மருந்தின் அவசர பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று ஃபைசர், பாரத் பயோடெக், சீரம் நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தது. கோவிஷீல்டு என்று இந்தியாவில் பெயரிடப்பட்டுள்ள ஆக்ஸ்போர்ட் தடுப்பு மருந்தை இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் விநியோகிக்கும் பொறுப்பு புனேவைச் சேர்ந்த சீரம் நிறுவனத்திற்கே வழங்கப்பட்டுள்ளது. பிரிட்டன் நாட்டில் ஆகஸ்போர்ட் கொரோனா தடுப்பு மருந்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டவுடன் இந்தியாவில் ஒப்புதல் அளிப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி ஒருவர் சமீபத்தில் கூறியிருந்தார்.
இந்தியாவில் இன்று ஒப்புதல்
இந்நிலையில், ஆகஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பு மருந்திற்கு பிரிட்டன் அரசு இன்று அனுமதியளித்தது. இந்தச் சூழ்நிலையில், இந்தியாவில் இந்தத் தடுப்பு மருந்தின் அவசர பயன்பாட்டிற்கு அனுமதியளிப்பது குறித்து இன்று இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு வாரியம் முடிவெடுக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இச்செய்தி மகிழ்ச்சி அளிக்கும் வகையில் உள்ளதாகவும் தடுப்பு மருந்தின் இறுதி ஒப்புதலுக்குக் காத்திருப்பதாகவும் சீரம் நிறுவனத்தின் தலைவர் ஆதார் பூனவல்லா கூறியுள்ளார்.
தடுப்பாற்றல் எவ்வளவு
உலகளவில் உருவாக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு மருந்துகளில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பு மருந்தும் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. மற்ற தடுப்பு மருந்துகளைப் போல மிகக் குறைவான வெப்ப நிலையில் இதைச் சேமித்து வைக்கத் தேவையில்லை என்பதாலும், உற்பத்தி செய்ய தேவையான செலவு குறைவு என்பதாலும் பெரும்பாலான வளரும் மற்றும் பின்தங்கிய நாடுகள் இந்தத் தடுப்பு மருந்தையே பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாதி மட்டும் வெளிநாடுகளுக்கு விற்பனை
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பு மருந்து குறித்து முன்னதாக ஆதார் பூனவல்லா கூறுகையில், "நாங்கள் உற்பத்தி செய்யும் தடுப்பு மருந்துகளில் 50% இந்தியாவிலேயே பயன்படுத்தப்படும். மீதமிருக்கும் 50% மட்டுமே மற்ற நாடுகளுக்கு விநியோகிக்கப்படும். இப்போதுவரை நாங்கள் தடுப்பு மருந்தின் 50 மில்லியன் டோஸ்களை உற்பத்தி செய்து, சேமித்து வைத்துள்ளோம். இப்போது மாதத்திற்கு 60-70 மில்லியன் டோஸ்களை உற்பத்தி செய்கிறோம், இது பிப்ரவரி மாதம் 100 மில்லியன் டோஸ்களாக அதிகப்படுத்தப்படும். இந்தியாவில் இந்த தடுப்பு மருந்தின் விலை 3 முதல் 4 டாலராகவே இருக்கும்" என்றார்.