இந்தியாவில் அனைவருக்குமே கொரோனா தடுப்பூசி போடவேண்டிய அவசியம் இல்லை- மத்திய அரசு
டெல்லி: இந்தியாவில் அனைவருக்குமே கொரோனா தடுப்பூசியை போட வேண்டிய அவசியம் இல்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது.
அமெரிக்கா, இத்தாலி, ரஷ்யா, பிரேசிலில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா மரணங்களும் அதிகமாக உள்ளன.
அமெரிக்காவில் 24 மணிநேரத்தில் மட்டும் 2,000க்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இன்னொரு பக்கம் கொரோனா தடுப்பு மருந்துகளை முழுவீச்சில் நடைமுறைக்கு கொண்டுவரும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் பல்ராம் பார்கவா, நாட்டின் ஒட்டு மொத்த மக்களுக்கும் கொரோனா தடுப்பு மருந்து கொடுக்க வேண்டியதில்லை. கொரோனா சங்கிலி பரவலை உடைக்கும் வகையில் தடுப்பு மருந்துகள் கொடுக்கப்பட வேண்டும் என்றார்.
மேலும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சக செயலாளர் ராஜேஷ் பூஷண் கூறுகையில், நாட்டின் அனைத்து மக்களுக்குமே கொரோனா தடுப்பு மருந்து கொடுப்பது பற்றி அரசு எப்போதும் பேசவும் இல்லை என்றார்.
ஆனால் முன்னதாக பிரதமர் மோடி, நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் கொரோனா தடுப்பு மருந்து கிடைக்கும் எனவும் கூறியிருந்தார். இந்த நிலையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து தேவையில்லை என கூறியிருப்பதும் சர்ச்சையாகி உள்ளது.