உக்கிரமடையும் கொரோனா.. இந்தியாவில் ஜூனில் தினசரி 2320 மரணங்கள் ஏற்படும்.. லான்செட்
டெல்லி : இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. ஒரு நாளைக்கு 1750 பேர் கொரோனாவால் உயிரிழந்து வருகின்றனர். இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.
இந்நிலையில் லான்செட் கோவிட் 19 ஆணைய உறுப்பினர்கள் அதிர்ச்சி தரும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் ஜூன் மாதம் முதல் வாரத்தில் இந்தியாவில் கொரோனாவால் தினசரி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை சராசரியாக 2320 ஆக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Managing India's second Covid 19 wave என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், உடனடியாக மேற்கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், நோய் பரவலை குறைக்க உதவக் கூடிய பரிந்துரை அம்சங்களும் குறிப்பிடப்பட்டுள்ளது.
விஸ்வரூபம் எடுத்த கொரோனாவை கட்டுப்படுத்த உத்தரப்பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு
அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு
அந்த அறிக்கையின்படி, நோய் பரவல் வேகமாக இருந்தாலும், புவியியல் வரையறைகளை பார்த்தால் இரண்டாம் அலையானது, முதல் அலையுடன் கிட்டதட்ட ஒத்துப் போவதாக உள்ளது. இருப்பினும் நகரங்களிலேயே நோய் பரவல் அதிகமாக காணப்படுகிறது. இரண்டாவது அலை புவியியல் அடிப்படையிலேயே தொகுக்கப்பட்டுள்ளது. முதல் 50 சதவீதம் அடங்கிய மாவட்டங்களின் எண்ணிக்கை, முதல் அலையின் போது 40 ஆக இருந்தது தற்போது 20 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 2020 ம் ஆண்டு ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் 75 சதவீதம் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 60 முதல் 100 ஆக இருந்தது. ஆனால் முதல் அலையில் இருந்து இரண்டாவது அலை 2 வழிகளில் வேறுபட்டது.
புதிதாக பாதிக்கப்படுவோர்
முதல் அலையுடன் ஒப்பிடுகையில் இரண்டாம் அலையில், புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மிக அதிகம். பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை 40 நாட்களுக்கும் குறைவான காலத்தில் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 10,000 லிருந்து 80,000 ஆக உள்ளது. ஆனால் கடந்த செப்டம்பரில் இந்த அளவை எட்ட 83 நாட்கள் ஆனது.
அறிகுறி இல்லாத கொரோனா
இரண்டாவது வேறுபாடு என்னவென்றால், தற்போது அறிகுறி இல்லாமல் அல்லது பாதி அளவு அறிகுறி உள்ளவர்களுக்கு தொற்று அதிகம் ஏற்படுகிறது. இதனால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்குள் குடும்பத்தினர், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என பலருக்கும் நோய் பரவி, பாசிடிவ் என்ற நிலை ஏற்படுகிறது.
அதிகரித்த இறப்பு விகிதம்
இறப்பு விகிதமானது மார்ச் 2020 ல் 1.3 சதவீதமாக இருந்தது. வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகள் விகிதமும் 2021 துவக்கம் வரை 0.87 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்தது. இதனால் இரண்டாம் அலையில் இறப்பு விகிதம் குறைவாகவே இருக்கும் என கணக்கிடப்பட்டது. ஆனால் ஏப்ரல் மாத துவக்கத்தில் தினசரி இறப்பு எண்ணிக்கை 664 ஆனது. இது ஜூன் மாதம் முதல் வாரத்தில் 2320 என்ற அளவை எட்டும்.
சோதனைக்கு கூடுதல் தொகை
2021 ல் சோதனைக்காக 1.7 பில்லியன் டாலர்களை இந்தியா செலவிட்டது. ஆனால் தற்போது கூடுதலாக 7.8 பில்லியன் டாலர்களை செலவிட வேண்டி இருக்கும். ஏப்ரல் 11 கணக்கிட்டின்படி 45 வயதிற்கு மேற்பட்ட 29.6 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். ஆனால் 45 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு முக்கியத்துவ அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும்.
மருந்துகள் அதிகம் தேவை
தற்போது கோவேக்சின் மற்றும் கோவிட்ஷீல்டு மருந்துகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அவசர கால உதவி அடிப்படையில் மற்ற தடுப்பு மருந்துகளுக்கும் அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். தற்போது இரு மருந்துகளும் ஒரு மாதத்திற்கு சராசரியாக 70 முதல் 80 மில்லியன் டோஸ்கள் தயாரிக்கப்படுகிறது. உள்நாட்டு தேவைக்கே இந்த மருந்துகள் 100 சதவீதம் பயன்படுத்தப்பட்டாலும், பாதிக்கும் மேல் பற்றாக்குறை ஏற்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாக்டவுன் பரிந்துரை இல்லை
அதே சமயம் மாநில அல்லது தேசிய அளவில் லாக்டவுனை அமல்படுத்த இந்த அறிக்கையில் எந்த பரிந்துரையும் அளிக்கப்படவில்லை. பொருளாதாரம் மற்றும் ஏழை மக்களை கருத்தில் கொண்டு, சில கட்டுப்பாடுகளை கொண்டு வர மட்டுமே பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மற்ற நாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களை 7 நாட்கள் தனிமைபடத்த வேண்டும். 8 வது நாள் ஆர்டி-பிசிஆர் சோதனை நடத்தப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தடைகளை அதிகப்படுத்துங்கள்
10 பேருக்கு மேல் கூட்டம் கூடுவதற்கு அடுத்த 2 மாதங்களுக்கு தடை விதிப்பதால் நோய் பரவலை கட்டுக்குள் கொண்டு வர முடியும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சோதனைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.