இந்திய எல்லையில் பதற்றம்.. தீவிரவாத தாக்குதல் குறித்த ரகசிய தகவல்.. தயார் நிலையில் கடற்படை
Recommended Video
டெல்லி: இந்திய எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தலாம் என்ற ரகசிய தகவலால் கடற்படையினர் தயார் நிலையில் உள்ளனர்.
ஜம்மு காஷ்மீருக்கான 370 சட்டப்பிரிவு கடந்த திங்கள்கிழமை நீக்கப்பட்டது. மேலும் அதற்கான மாநில அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. இதற்கு இந்தியாவில் எதிர்க்கட்சிகள் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்தியாவின் இந்த நகர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் காஷ்மீரில் இன அழிப்புக்கு இந்தியா திட்டமிடும். அங்கிருந்து உள்ளூர் மக்களை வெளியேற்றிவிட்டு பிற பகுதிகளை சேர்ந்தவர்களை குடியமர்த்தி பெரும்பான்மையினராக மாற்ற முயற்சி என்றும் இம்ரான் கான் கூறியிருந்தார்.
இதையடுத்து இந்தியாவுடன் தூதரக உறவுகளை பாகிஸ்தான் துண்டித்துக் கொள்வது, இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது என முடிவு செய்யப்பட்டது. காஷ்மீர் விவகாரத்தில் ஐநா கதவை பாகிஸ்தான் தட்டிய நிலையில் அதுவும் பயனில்லாமல் போய்விட்டதால் இந்தியா மீது கடும் கோபத்தில் உள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் எந்த நேரத்திலும் எல்லையில் ஊடுருவி தாக்குதல் நடத்தக் கூடும் என ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போர் கப்பல்களுடன் இந்திய கடற்படை தயார் நிலையில் உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.