வாய்ப்பில்லை ராஜா..நாட்டில் வேக்சின் பணி படுமந்தம்.. அனைவருக்கும் வேக்சினுக்கு இதை கட்டாயம் செய்யணும்
டெல்லி: கொரோனா பரவல் கடந்த சில நாட்களாக அதிகரிக்கவில்லை என்றாலும்கூட தடுப்பூசி பணிகள் மிக மெதுவாக நடைபெறுவதால், கொரோனா 3ஆம் அலை குறித்த கவலை அதிகரித்துள்ளது.
Recommended Video
இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை கடந்த சில மாதங்களாக மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. தினசரி கொரோனா பாதிப்பு மட்டும் நான்கு லட்சம் வரை கூட சென்றது.
தற்போதுதான் கொரோனா பரவல் மெல்லக் கட்டுக்குள் வருகிறது. இந்தச் சூழலில் கொரோனா தடுப்பூசி பணிகளை வேகப்படுத்த வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
கொரோனா தடுப்பூசி போட காத்திருக்க வேண்டாம் - மாநகராட்சி இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்
வேக்சின் பணிகள்
மத்திய அரசும் இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டிலுள்ள அனைவருக்கும் வேக்சின் போடப்படும் என உறுதி அளித்துள்ளது. நாட்டில் கடந்த ஜூன் 21ஆம் தேதி அதிகபட்சமாக ஒரே நாளில் 80 லட்சம் பேருக்கு வேக்சின் போடப்பட்டது. இருப்பினும், அதன் பின்னர் வேக்சின் பணிகள் தொடர்ந்து மெதுவாகவே நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாட்டிலுள்ள அனைவருக்கு வேக்சின் போட வேண்டும் என்றால் தடுப்பூசி பணிகளைக் குறைந்தது மூன்று மடங்கு அதிகரிக்க வேண்டும் என CRISIL ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
கவலைக்குரிய வேகம்
இந்தியாவில் தற்போது கவலைக்குரிய வேகத்தில் மிக மெதுவாகத் தடுப்பூசி பணிகள் நடைபெறுவதாக CRISIL தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் தினசரி 35 லட்சம் பேருக்கு வேக்சின்கள் போடப்பட்டது. இது மே மூன்றாம் வாரம் 13 லட்சமாகக் குறைந்தது. ஜூன் 20ஆம் தேதி மீண்டும் இது 32 லட்சமாக உயர்ந்துள்ளது. மேலும், மத்திய அரசின் புதிய தடுப்பூசி கொள்கை வேக்சின் செலுத்தப்படும் வேகத்தை அதிகப்படுத்தும் என எதிர்பார்க்கிறோம்.
வெறும் 3.8% தான்
நாட்டின் மக்கள்தொகையில் 3.8 சதவீதம் பேருக்கு மட்டுமே முழுமையாக வேக்சின் போடப்பட்டுள்ளது, 17.2 சதவீதம் பேர் ஒரு டோஸை பெற்றுள்ளனர். இந்த ஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் வேக்சின் போட வேண்டும் என்றால் தினசரி 80 லட்சம் பேருக்கு நாம் தடுப்பூசி பேட வேண்டும். இது தற்போது நாம் செலுத்தும் தடுப்பூசிகளை விட மூன்று மடங்கு அதிகமாகும்.
பொருளாதாரம்
மேலும், தடுப்பூசி செலுத்தும் பணிகள் வேகம் பெற்றால் மட்டுமே பொருளாதார நடவடிக்கைகள் மாநிலத்தில் வேகமாக நடைபெறும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் என வேகமாகத் தடுப்பூசி பணிகளை மேற்கொண்ட நாடுகளில் தான் பொளுதார நடவடிக்கைகள் சிறப்பாக உள்ளதையும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதுதவிர அந்த நாடுகள் அறிவித்த மிகப் பெரிய பொருளாதார ஊக்குவிப்பு திட்டமும் உதவியதாகக் கூறப்பட்டுள்ளது.
மூன்று மடங்கு
இந்தியாவில் தடுப்பூசி பணிகள் மெதுவாக உள்ளதால் பொருளாதாரமும் மெதுவாக மீண்டு வருகிறது. பொருளாதாரத்தை விரைவாக மீட்டெடுக்க வேக்சின் பணிகளை வேகப்படுத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த வேகத்தில் வேக்சின் பணிகளை மேற்கொண்டால், இந்தாண்டு இறுதியில் நாட்டிலுள்ள 60% பேருக்கு மட்டுமே தடுப்பூசி பேட முடியும். இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டிலுள்ள அனைவருக்கும் தடுப்பூசிகளைப் போட, வேக்சின் பணிகளை டிசம்பர் இறுதி வாரம் வரை மூன்று மடங்கு அதிகரிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.