பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பொதுத்தேர்தலா? இந்தியா கடும் எதிர்ப்பு- உடனே வெளியேற எச்சரிக்கை
டெல்லி: பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதிகளாக கில்ஜிட், பால்டிஸ்தானில் பொதுத்தேர்தல் நடத்த மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அத்துடன் ஆக்கிரமித்திருக்கும் காஷ்மீர் பகுதிகளில் இருந்து பாகிஸ்தான் உடனே வெளியேற வேண்டும் என்றும் மத்திய அரசு எச்சரித்திருக்கிறது.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்திய அரசு கடந்த ஆண்டு ரத்து செய்தது. அப்போது ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என 2புதிய யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து மத்திய அரசு திருத்தப்பட்ட புதிய இந்திய வரைபடத்தை வெளியிட்டது. அதில் லடாக் யூனியன் பிரதேசத்தில் லே, கார்கில் மாவட்டங்கள் இடம்பெறும். இதில் கார்கில் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமித்திருக்கும் கில்ஜிட், பால்டிஸ்தான் உள்ளிட்ட பகுதிகள் இடம்பெறும் என சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இதனால் ஒட்டுமொத்த பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான் எனவும் பிரகடனம் செய்யப்பட்டிருந்தது.
இதனால் பாகிஸ்தான் ஆக்கிரமித்திருக்கும் காஷ்மீர் பகுதிகளை மத்திய அரசு எந்த நேரத்திலும் கைப்பற்றும் என்கிற பேச்சும் இருந்தது. ஆனால் அப்படியான எந்த ஒரு திட்டமும் இல்லை என்று மத்திய அரசும் விளக்கம் அளித்திருந்தது.
இந்நிலையில் கில்ஜிட் - பால்டிஸ்தான் பகுதிகளில் பொதுத் தேர்தல்களை நடத்தலாம் என்று பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கிறது. இந்த தீர்ப்புக்கு மத்திய அரசு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், கில்ஜிட், பால்டிஸ்தான் உள்ளிட்ட அனைத்து காஷ்மீரின் பகுதிகளும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும்.
பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. காஷ்மீர் பகுதிகளை பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருக்கிறது. அந்த பகுதியில் பாகிஸ்தானுக்கு எந்த ஒரு உரிமையும் இல்லை. ஆகையால் சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருக்கும் காஷ்மீர் பகுதிகளில் இருந்து பாகிஸ்தான் உடனே வெளியேற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.