மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்கு தள்ளுகிறது இந்தியா... ஐ.நா தகவல்
Recommended Video
டெல்லி: இந்தியாவின் மக்கள் தொகையானது வரும் 2027-ஆம் ஆண்டிற்குள் சீனாவை முந்தி, உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக விளங்கும் என ஐ.நா ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
ஐநா, 'The World Population Prospects 2019' என்ற உலக மக்கள் தொகை தொடர்பான அறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளது. இதில் உலகத்திலுள்ள மக்கள் தொகை அளவை அதிகரிப்பது குறித்தும், மக்களின் வாழ்க்கை தரம் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 2050ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை 9.7 பில்லியனாக இருக்கும் என்றும் உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா, இன்னும் 8 ஆண்டுகளில் உருவெடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 நாடுகளில் அதிகரிப்பு
உலகளவில் கருவுறுதல் சதவிகிதம் 3.2 %லிருந்து 2.5% ஆக குறைந்துள்ளது. இது 2050ஆம் ஆண்டில் 2.2% ஆக குறையும். இந்தியாவில் தற்போது இதன் சதவிகிதம் 2.2% ஆக உள்ளது என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது. 2019ஆம் ஆண்டிலிருந்து 2050ஆம் ஆண்டு வரை, உலக மக்கள் தொகை அதிகரிக்க இருக்கும் எண்ணிக்கையில் பாதி, இந்தியா, நைஜிரியா, பாகிஸ்தான், காங்கோ, எத்தியோபியா, டான்சானியா, இந்தோனேஷியா, எகிப்து மற்றும் அமெரிக்கா ஆகிய 9 நாடுகள் ஆகும்.
மக்களின் ஆயுள் காலம்
உலக மக்கள் தொகை அதிகரிக்கும் நாடுகள் பெரும்பாலும் ஏழ்மையான நாடுகளாகவே உள்ளது என்றும் அந்த அறிக்கைச் சுட்டிகாட்டியுள்ளது. இந்த நாடுகளில் நிலவிவரும் வறுமை, ஊட்டச்சத்தின்மை, நோய்கள் ஆகியவை மக்கள் தொகை உயர்வால் அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த நாடுகளில் மக்களின் ஆயுள் காலம் உலக ஆயுள் காலத்தைவிட 7.4 ஆண்டுகள் குறைவாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
168 கோடி மக்கள்
இந்த நாடுகளில் இருக்கும் குழந்தை இறப்பு, பிரசவகால இறப்பு, சண்டைகள், ஹெச்ஐவி போன்ற கொடிய நோய்கள் ஆகியவை ஆயுள் காலம் குறைவதற்கு காரணமாக இருக்கும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, தனியார் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவின் மக்கள்தொகை, 2018 கணக்கின்படி, 137 கோடியாக உள்ளது. சீனாவின் மக்கள்தொகை, 139 கோடியாக உள்ளது. இந்தியாவின் மக்கள்தொகை, 2030ம் ஆண்டில், 0.93 சதவீதம் வளர்ச்சி அடைந்து, 153 கோடியாக இருக்கும். அதுவே, 2030 - 2050 வரையிலான காலத்தில், 0.46 சதவீதம் வளர்ச்சியுடன், 168 கோடியாக இருக்கும்.
இந்தியாவின் பங்கு
சீனாவின் மக்கள்தொகை, 2030ம் ஆண்டில், 142 கோடியாகவும், 2050ம் ஆண்டில், 134 கோடியாகவும் இருக்கும். இந்தக் காலத்தில், சீன மக்கள்தொகையுடன் ஒப்பிட்டால், இந்தியாவின் மக்கள்தொகை, 2030ம் ஆண்டில், 8 சதவீதமும், 2050ம் ஆண்டில், 25 சதவீதமும் அதிகமாக இருக்கும்.தற்போது உலக மக்கள் தொகையில் இந்தியாவின் பங்கு, 18 சதவீதமாக உள்ளது. இது, 2030ம் ஆண்டில், 17.9 சதவீதமாகவும், 2050ம் ஆண்டில், 17.1 சதவீதமாகவும் குறையும். அதேபோல், தெற்காசியாவில் இந்தியாவின் மக்கள்தொகை பங்கு, தற்போது, 71.8 சதவீதமாக உள்ளது. இது, 2050ம் ஆண்டில், 69.8 சதவீதமாக குறையும் என்றும் கூறப்பட்டுள்ளது.