ரூ.6000 கோடி.. ரஷ்யாவிடம் வழங்கியது இந்தியா.. வருகிறது அடித்து தூக்கும் எஸ்-400 ஏவுகணை சிஸ்டம்
டெல்லி: எஸ் -400 ஏவுகணை சிஸ்டத்தை ரஷ்யாவிடமிருந்து விரைவில் வாங்க வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. இந்த சிஸ்டத்தை வாங்குவதற்கு, இந்தியா முதல் தவணையாக, ரூ.6000 கோடியை ரஷ்யாவிற்கு செலுத்தியுள்ளது.
இந்தியா தாமதமின்றி கடற்படையில் இந்த சிஸ்டத்தை சேர்க்க விரும்புகிறது இதன் மூலம் தெளிவாக தெரிகிறது. இந்த ஏவுகணை சிஸ்டம் 400 கி.மீ தூரம் வரை கண்காணிக்க கூடியது. ஜெட், உளவு விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைக் கண்டுபிடித்து அழிக்க இதனால் முடியும்.
உலகிலேயே மிக நவீனமான நிலத்தில் இருந்து வானில் உள்ள இலக்குகளைத் தாக்கும் வான் பாதுகாப்பு அமைப்புகளில் S 400 அமைப்பும் ஒன்றாகும். 400 கிமீ தூரம் பாய்ந்து சென்று இலக்கைத் தாக்கவல்ல இந்த அமைப்பு ஒரே நேரத்தில் 80 இலக்குகளை அடித்து வீழ்த்தும் திறன் கொண்டது. சீனாவிடம் இந்த ஏவுகணை அமைப்பு உள்ளது. எனவே இந்தியாவும் தற்காப்புக்காக இந்த சிஸ்டத்தை வாங்குகிறது. ஆனால் ரஷ்யாவிடம் ஆயுதம் வாங்குவதற்கு அமெரிக்க அதிருப்தி தெரிவித்துள்ளது.
புதன்கிழமை மாஸ்கோவில் நடைபெறும் ராணுவ மற்றும் ராணுவ தொழில்நுட்பக் கழகத்திற்கான 19 வது இந்தோ-ரஷ்ய அரசிடை ஆணையம் (ஐ.ஆர்.ஐ.ஜி.சி-எம் & எம்.டி.சி) சந்திப்பில், முதல்கட்டமாக 5, எஸ் -400 யூனிட்டுகளை விரைவாக வழங்குவது குறித்து விவாதிக்கப்படும்.
2018ம் ஆண்டு அக்டோபர் மாதம், இரு நாடுகளுக்கும் இடையே சுமார் 5.43 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 40 ஆயிரம் கோடி) எஸ் -400 ஏவுகணை சிஸ்டத்திற்கான, ஒப்பந்தம் கையெழுத்தானது. அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் அகுலா -1இன் குத்தகை குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
இந்த ஆண்டு மார்ச் மாதம் இரு நாடுகளுக்கிடையில் 3 பில்லியன் டாலருக்கும் அதிகமான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது, இதன் மதிப்பு சுமார் ரூ.21,000 கோடி.
இந்த சந்திப்பின்போது பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ரஷ்ய பிரதிநிதி செர்கி ஷோயுக் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.