முதலில் சீனா... இப்போது பாகிஸ்தான்... எல்லையில் மீண்டும் திரும்பும் அமைதி... இனி நோ துப்பாக்கி சூடு
டெல்லி: எல்லை தொடர்பான பேச்சுவார்த்தையில் சுமுகமான உறவை எட்டப்பட்டதைத் தொடர்ந்து போர் நிறுத்த ஒப்பந்தத்தைக் கடைப்பிடிக்க உள்ளதாக இந்தியா-பாகிஸ்தான் கூட்டாக அறிவித்துள்ளது.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எல்லையில் பல ஆண்டுகளாகவே பதற்றம் தொடர்ந்து இருந்து வருகிறது. உலகளவில் மிகவும் பாதுகாக்கப்படும் எல்லையாக இந்தியா பாகிஸ்தான் எல்லை உள்ளது. எல்லையில் நிலவும் பதற்றத்தைத் தணிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், அதில் எவ்வித பலனும் இதுவரை ஏற்பட்டதில்லை. இந்நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ராணுவ உயர் அதிகாரிகள் கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தினர்.
போர் நிறுத்த உடன்படிக்கை
அந்தப் பேச்சுவார்த்தையில் எல்லை தொடர்பாக பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டது. எல்லையில் அமைதியை ஏற்படுத்தவே விரும்புவதாக இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் தெரிவித்தனர். இதையடுத்து, 2003ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையைப் பின்பற்ற இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே ஓர் ஆண்டாக நிலவி வந்த பதற்றம் மெல்ல தணியும் இந்தச் சூழலில், தற்போது பாகிஸ்தானும் போர் நிறுத்த உடன்படிக்கையைப் பின்பற்றவுள்ளதாக அறிவித்துள்ளது.
கூட்டாக அறிக்கை
இது குறித்து இரு நாட்டு ராணுவங்களும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "எல்லைப் பகுதியில் பாதுகாப்பான சூழல் நிலவ வேண்டும் என்பதற்காக இரு தரப்பு ஆலோசனையில் ஈடுபட்டோம். பிப்ரவரி 24 நள்ளிரவு முதல் போர் நிறுத்த ஒப்பந்தங்கள் நடைமுறைக்குக் கொண்டு வர இரு தரப்பும் ஒப்புக்கொண்டன. எல்லைப் பகுதியில் துப்பாக்கிச் சூடு நிறுத்தப்படுவதை இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகரிக்கும் துப்பாக்கிச் சூடு
கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய-பாகிஸ்தான் எல்லையில் நிலைமை மோசமாகவே இருந்தது. எல்லையில் நிகழும் துப்பாக்கிச் சூடுகள் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2018ஆம் ஆண்டு எல்லையில் 1,629 துப்பாக்கிச் சூடுகள் நடைபெற்றிருந்தன. இது 2019ஆம் ஆண்டு 3,168ஆக உயர்ந்தது. குறிப்பாக புல்வாமாக தாக்குதல் மற்றும் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதற்குப் பிறகு எல்லையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடுகள் பல மடங்கு அதிகரித்துள்ளன.
பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை
இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் என்பது இந்திய - பாகிஸ்தான் எல்லையில் அமைதியை உருவாக்குவதற்கான ஒரு முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் அதேநேரம் காஷ்மீரில் இந்தியா தனது பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை ஒரு போதும் குறைத்துக் கொள்ளாது என்று ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கடந்தாண்டு மட்டும் பாதுகாப்புப் படையினரால் பள்ளத்தாக்கு பகுதியில் 221 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்