மாணவர் விவகாரம், சீனா பிரச்சனை- இந்தியா, யுஎஸ் வெளியுறவு செயலாளர்கள் பேச்சுவார்த்தை
டெல்லி: சீனா விவகாரம், எஃப்1 விசா ஆகியவை தொடர்பாக இந்தியா, அமெரிக்காவின் வெளியுறவுச் செயலாளர்கள் இடையேயான பேச்சுவார்த்தை நடைபெற்றது.
லடாக் கிழக்கு எல்லையில் சீனாவின் ஊடுருவலை இந்தியா முறியடித்தது. இதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தது. இதனால் இந்தியா-சீனா இடையே பதற்றம் நீடித்து வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்காவுடன் இந்தியா பல்வேறு நிலைகளில் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. இதனையடுத்து இந்தியாவுக்கு ராணுவ ரீதியாக உறுதுணையாக இருப்போம் என அமெரிக்கா அறிவித்திருக்கிறது.
இதனிடையே இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷிரிங்லா (Harsh Shringla), அமெரிக்கா வெளியுறவுத் துறை செயலாளர் டேவிட் ஹாலே ஆகியோர் வீடியோ கால் மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர். சர்வதேச அரசியல், பொருளாதார வர்த்தகம், பிராந்திய விவகாரங்கள், பிராந்தியங்களில் கூட்டாக செயல்படுவது உள்ளிட்டவை குறித்து இருவரும் விவாதித்தனர்.
உலக சுகாதார அமைப்பில் (WHO) இருந்து அதிரடியாக வெளியேறியது அமெரிக்கா!
இப்பேச்சுவார்த்தையின் போது, வெளிநாட்டு மாணவர்களுக்கான விசாவை திரும்பப் பெறும் அமெரிக்காவின் முடிவு குறித்து இந்திய தரப்பில் கவலை தெரிவிக்கப்பட்டது. இருதரப்புக்கும் பயன் தரக்கூடிய வர்த்தகம் மற்றும் பல்வேறு பிரிவினருக்கான விசா வழங்குதல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
மேலும், இந்திய பசிபிக் பிராந்தியத்தில் இருநாடுகளும் கூட்டாக இணைந்து செயல்படுவது, 2021-2022 -ம் ஆண்டில் ஐநா பாதுகாப்பு கவுன்சில் இந்தியா உறுப்பினராவது உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்பட்டது என வெளியுறவுத் துறை அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருதரப்பு உறவை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இணக்கம் காணப்பட்டது.
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் ஆன்லைன் கல்வி முறைக்கு மாற உள்ளனர். இதனால் பல்கலைக் கழகங்களில் தங்கி இருக்கும் வெளிநாட்டு மாணவர்கள் வெளியேற்றப்படுகிற சூழ்நிலை உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.