மலேசிய பொருட்களுக்கு 5% கூடுதல் இறக்குமதி வரி.. மத்திய அரசு அதிரடி.. என்ன காரணம்?
மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தாவர எண்ணெய் உட்பட பல்வேறு பொருட்களுக்கு 5% கூடுதலாக சுங்க வரி விதிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தாவர எண்ணெய் உட்பட பல்வேறு பொருட்களுக்கு 5% கூடுதலாக சுங்க வரி விதிக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே அதிகமாக எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முக்கியமான இடத்தில் இருக்கிறது. அரபு நாடுகளிடம் இருந்து நாம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறோம்.
அதேபோல் மலேசியாவிடம் இருந்து அதிகமாக தாவர எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறோம். பால்ம் ஆயில், சோயா எண்ணெய் ஆகிய எண்ணெய்களை அதிகமாக இறக்குமதி செய்து வருகிறது. அதிலும் கடந்த 2018 செப்டம்பர் மாதத்திற்கு பின் இந்த எண்ணெய் இறக்குமதி அதிகம் ஆகியுள்ளது.
கடந்த 9 மாதங்களில் மட்டும் தாவர எண்ணெய் இறக்குமதி 314% உயர்ந்துள்ளது. அதிலும் பால்ம் ஆயில் தேவை நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் இதுபோன்ற தாவர எண்ணெய் அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டாலும், மலேசியா இறக்குமதி எளிதாக கிடைப்பதால், அதிகமாக இறக்குமதி செய்யப்படுகிறது.
இந்த நிலையில்தான் மலேசியாவின் தாவரம் எண்ணெய் உட்பட அனைத்து பொருட்களுக்கும் 5% சுங்க வரி உயர்த்தப்பட்டுள்ளது. இந்திய தாவர எண்ணெய் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் இந்த வரி உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவில் தொழிலை உருவாக்க இந்த முறை பயன்படுத்தப்பட உள்ளது.
அடுத்த 3 மாதங்களுக்கு இந்த வரி விதிப்பு நடைமுறையில் இருக்கும். அதன்பின் நிலைமையை பொறுத்து வரி விதிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.