உலக அளவில் 1 லட்சம் பேருக்கு 4.1 கொரோனா நோயாளிகள் மரண விகிதம் - இந்தியாவில் 0.2மட்டுமே!
டெல்லி: உலக அளவில் 1 லட்சம் பேருக்கு சராசரியாக 4.1 என்ற அளவில் கொரோனா நோயாளிகள் மரண விகிதம் உள்ள நிலையில் இந்தியாவில் ஒரு லட்சம் பேருக்கு மரண விகிதம் சுமார் 0.2 என்ற அளவில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமையன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாடுகள் | மரணங்கள் | ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு மரண விகிதம் |
உலக அளவில் | 3,11,847 | 4.1 |
அமெரிக்கா | 87180 | 26.6 |
பிரிட்டன் | 34636 | 52.1 |
இத்தாலி | 31908 | 52.8 |
பிரான்ஸ் | 28059 | 41.9 |
ஸ்பெயின் | 27650 | 59.2 |
பிரேசில் | 15633 | 7.5 |
பெல்ஜியம் | 9052 | 79.3 |
ஜெர்மனி | 7935 | 9.6 |
ஈரான் | 6988 | 8.5 |
கனடா | 5702 | 15.4 |
நெதர்லாந்து | 5680 | 33.0 |
மெக்சிகோ | 5045 | 4.0 |
சீனா | 4645 | 0.3 |
துருக்கி | 4140 | 5.0 |
ஸ்வீடன் | 3679 | 36.1 |
இந்தியா | 3163 | 0.2 |
2020 மே 19 வரையிலான தகவல்.
உரிய சமயத்தில் நோயாளிகளைக் கண்டறிந்து, மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்த காரணத்தால், ஒப்பீட்டளவில் மரண விகிதங்கள் குறைவாக உள்ளன. நேற்று நாட்டில் மிக உயர்ந்தபட்ச எண்ணிக்கையாக 1,08,233 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரையில் மொத்தம் 24,25,742 மாதிரிகள் பரிசோதிக்கப் பட்டுள்ளன.
ஜனவரியில் ஒரு ஆய்வகத்தில் மட்டும் கோவிட்-19 பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், 385 அரசு ஆய்வகங்கள், 158 தனியார் ஆய்வகங்களில் இந்தப் பரிசோதனையை உருவாக்கி வசதிகள் மிக வேகமாக அதிகரிக்கப்பட்டுள்ளன.
சென்னையில் 552 பேருக்கு கொரோனா - பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வந்த 87 பேருக்கும் பாதிப்பு
மத்திய அரசின் அனைத்து ஆய்வகங்கள், மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள் மற்றும் தனியார் துறை ஆய்வகங்களை ஒருங்கிணைத்து நாட்டில் கோவிட் பரிசோதனைத் திறன் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. பரிசோதனைகளைத் தீவிரப்படுத்துவதற்காக TrueNAT மற்றும் CBNAAT போன்ற மருத்துவப் பரிசோதனைக் கருவிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவிட்-19 மருத்துவப் பரிசோதனைக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. முந்தைய வரையறைகளுடன் சேர்த்து, கோவிட்-19 நோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சையில் ஈடுபட்டிருக்கும் முன்களப்பணியாளர்கள், தீவிர மூச்சுக்கோளாறு அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அனைத்து நோயாளிகள், நாடு திரும்பியவர்கள் மற்றும் குடிபெயர்ந்து சென்று சொந்த ஊர் திரும்பியவர்களில் தீவிர மூச்சுக்கோளாறு உள்ள அனைவருக்கும் உடல்நலம் குன்றிய 7 நாட்களுக்குள் மருத்துவப் பரிசோதனை செய்யவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.