என்னாது பாக்.குடன் பேச்சுவார்த்தையா?.. போங்கப்பா வேலையை பார்த்துக்கிட்டு.. மத்திய அரசு அதிரடி!
டெல்லி: பாகிஸ்தானுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட இருப்பதாக வெளியான தகவலை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இந்தியாவுடனான உறவை புதுப்பிக்கும் முயற்சிகளில் பாகிஸ்தான் அரசு கற்ற வித்தைகளையும் காட்டி வருகிறது. ஆனால், தீவிரவாதிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொண்டால் மட்டுமே பேச்சுவார்த்ததை குறித்து பரிசீலிக்க இயலும் என்று இந்தியா தெரிவித்துவிட்டது. இதனால், பாகிஸ்தான் அரசு புது புது வழிகளில் இந்தியாவின் கவனத்தை ஈர்க்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
அண்மையில் மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்றதற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வாழ்த்து தெரிவித்தார். இதற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்து செய்தி வெளியிட்டார். அத்துடன், அண்டை நாடுகளுடன் சுமூகமான உறவை பேணுவதற்கு இந்தியா விரும்புகிறது.
ஆசியாவில் தீவிரவாதத்தை ஒழித்து அமைதியான சூழலை ஏற்படுத்துவதற்கு பாகிஸ்தான் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். அதேநேரத்தில், பதவி ஏற்பு விழாவிற்கு இம்ரான்கானுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
இந்த நிலையில், கடந்த வாரம் கிர்கிஸ்தான் பயணத்தின்போது பாகிஸ்தான் வான் வழியை தவிர்த்து அந்நாட்டுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி வைத்தியத்தை கொடுத்தார். அத்துடன், கிர்கிஸ்தான் மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுடனான சந்திப்பையும் தவிர்த்தார்.
இந்த நிலையில், பாகிஸ்தானிலிருந்து வெளியாகும் பத்திரிக்கை ஒன்றில், பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா தயாராக உள்ளதாகவும், இதுகுறித்து இம்ரான்கானிடம் பிரதமர் மோடி தகவல் கொடுத்துள்ளதாகவும் ஒரு செய்தியை வெளியிட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில், பாகிஸ்தான் பத்திரிக்கை செய்தி குறித்து மத்திய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ரவீஸ் குமார் விளக்கம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்," மோடி பிரதமராக பதவி ஏற்றதற்காக பாகிஸ்தான் பிரதமர் வாழ்த்து தெரிவித்திருந்தார். இதற்கு மோடி சார்பில் நன்றி தெரிவித்து செய்தி வெளியிடப்பட்டது.
இதன் அடிப்படையில்தான் பாகிஸ்தான் பத்திரிக்கை யூகத்தின் அடிப்படையில் செய்தி வெளியிட்டதாக தெரிகிறது. பாகிஸ்தானுடன் அமைதி பேச்சுவார்த்தை குறித்து இந்தியா சார்பில் எந்த தகவலும் பாகிஸ்தானுக்கு அளிக்கப்படவில்லை என்று தெரிவித்தார். இதனால், பாகிஸ்தான் பத்திரிக்கை வெளியிட்ட செய்தி ஆதாரமற்றது என்று தெரியவந்துள்ளது.