மதச்சுதந்திரம்.. உங்களுக்கு என்ன தெரியும்? அமெரிக்க மத சுதந்திர ஆணையத்திற்கு இந்தியா பதிலடி
டெல்லி: மத சுதந்திரம் குறித்த அமெரிக்காவின் சர்வதேச மதசுதந்திர ஆணையத்தின் அறிக்கையை இந்தியா நிராகரித்தது. இது ஒருதலைபட்சமானது மட்டுமின்றி துல்லியமற்றது எனக்கூறியுள்ள இந்தியா நாட்டின் பன்மைத்துவத்தை பற்றிய புரிதல் இல்லாமல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என கடுமையாக சாடியுள்ளது.
இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் உள்ள மதசுதந்திரம் குறித்து கடந்த மாதம் அமெரிக்கா சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சத்தின் செயலாளர் ஆன்டனி பிளிங்கன் வெளியிட்ட அறிக்கையில் 2021ம் ஆண்டில் இந்தியா உள்பட பிற நாடுகளில் உள்ள மதசுதந்திரங்கள் தொடர்பான விவரங்கள் இருந்தன.
இந்தியாவில் மதரீதியான நிகழ்வுகள் கவலையளிக்கிறது! சர்வதேச மதசுதந்திரத்துக்கான அமெரிக்க தூதர் கருத்து
ஆபத்து நிலையில் மதசுதந்திரம்
அந்த அறிக்கையில் மதசிறுபான்மை மக்கள் மீது கொலை, தாக்குதல், மிரட்டல் ஆண்டு முழுவதும் நடந்துள்ளது. ஆண்டு முழுவதும் நடந்துள்ளது. பசுவதை அல்லது மாட்டிறைச்சி விவகாரங்களில் இந்துக்கள் அல்லாதவர்கள் மீது வன்முறை நிகழ்த்தப்பட்டுள்ளது என்பன விபரங்கள் இருந்தன. மேலும் இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 11 நாடுகளில் மதசுதந்திரம் என்பது ஆபத்து நிலையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்தியா கடும் கண்டனம்
அமெரிக்காவின் இந்த அறிக்கைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. சர்வதேச உறவுகளிலும் வாக்கு வங்கி அரசியல் நடப்பதாகவும், உறுதியான தகவல்கள் இன்றி பிற நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுகிறது. இது துரதிர்ஷ்டவசமானது என இந்தியா கடுமையாக சாடியது. மேலும் இந்தியா என்பது இயற்கையாகவே பன்முகத்தன்மையுடன் உள்ளது. இந்தியா எப்போதுமே மத சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளை மதித்து நடக்கிறது. இதனால் இத்தகைய செயலை தவிர்க்க வேண்டும் என இந்தியா தரப்பில் கூறப்பட்டது.
இந்திய வெளியுறவுத்துறை நிராகரிப்பு
இந்நிலையில் தற்போது மதசுதந்திரம் தொடர்பான அமெரிக்காவின் கருத்துக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி பதிலளித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது: சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் இந்தியா மீதான ஒருதலைபட்ச மற்றும் துல்லியமற்ற கருத்துகளை கூறியுள்ளது. இதனை நாங்கள் நிராகரிக்கிறோம்.
புரிதல் குறைப்பாட்டின் வெளிப்பாடு
இந்த கருத்துகள் என்பது இந்தியாவின் அரசியலமைப்பு கட்டமைப்பு, பன்முகத்தன்மை மற்றும் ஜனநாயக நெறிமுறைகள் பற்றிய புரிதல் குறைபாட்டின் வெளிப்பாடாக உள்ளது. வருந்தத்தக்க வகையில் அந்த ஆணையம் தொடர்ச்சியாக மீண்டும் மீண்டும் தவறாக இந்தியாவை சித்தரிக்கிறது. இத்தகைய நடவடிக்கை என்பது அந்த அமைப்பின் மீதான நம்பகத்தன்மை பற்றிய கவலைகளை உண்டாக்கும்'' என கூறியுள்ளார்.
மாநாட்டிலும் இந்தியா மீது குற்றச்சாட்டு
இதற்கிடையே தான் நேற்று முன்தினம் அமெரிக்க தூதராக ரஷாத் உசேன் மதசுதந்திரத்துக்கான மாநாட்டில் பேசினார். அப்போது, இந்தியாவில் இப்போது குடியுரிமை சட்டம் என்பது ஏட்டளவில் உள்ளது. தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், ஹிஜாப்புக்கு தடை விதித்தது, வீடுகளை புல்டோசர் மூலம் இடித்தது பற்றியும் நாங்கள் அறிந்து உள்ளோம். மத்திய அமைச்சர் (மறைமுகமாக அமித்ஷா) வங்கதேச முஸ்லிம்களை கரையான்கள் என்று குறிப்பிடுகிறார். இதனால் நாங்கள் கவனித்து செயல்பட வேண்டியது முக்கியமானதாக உள்ளது. இந்தியாவில் பல மதகுழுக்கள் உள்ளன. மேலும் மதம் சார்ந்த நிகழ்வுகள் நடக்கின்றன. இது கவலை அளிக்கும் வகையில் உள்ளது. இதுதொடர்பான பிரச்சனையை சமாளிப்பது தொடர்பாக இந்திய அதிகாரிகளிடம் பேசி உள்ளோம்'' என தெரிவித்து இருந்தார்.